Tuesday, August 27, 2024

MOSS SHIELD RAIN FOREST TREES மழைக்காட்டு மரங்களைப் பாதுகாக்கும் மாஸ் எனும் படர்பாசிச் செடிகள்

IF WE LOSS THE FORESTS, WE LOSE OUR ONLY TEACHERS - Bill Mollison

MOSS PROTECT
TREES

வணக்கம். நண்டுகளைப் பற்றிய கட்டுரை எண் போன்ற வாசகர்களைக் கவர்ந்துள்ளது. பள்ளிப்பிராயத்தில் நண்பர்களுடன் மதுரை சோழவந்தான் பகுதியில் வயல் நண்டைப் பிடித்து விளையாடி இருக்கிறேன். சென்னையில் சாந்தோம் / மெரீனா கடற்கரைக்கு செல்லும்போதெல்லாம் நான் நண்டுகளைப்பிடிக்க பெருமுயற்சி எடுத்து பிடிக்க முடியாமல் தோற்றது இன்றைக்கும் எனக்குள் சிரிப்பை வரவழைக்கும். எஸ்.குணசேகரன், சென்னை

கடற்கரை நண்டுகளைப் பிடிப்பது சுலபமான காரியம் இல்லை. நானும் பலமுறை முயற்சி செய்து ஒருமுறைகூட அதனிடம் ஜெயித்ததில்லை. ஆனால் ஒருமுறை ஆற்றங்கரையில் ஒரு நண்டு வளையில் கையை விட்டேன். ஆனால் ஒரு பெரிய குறவை மீனின் தலை கையில் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் அதனை வளையிலிருந்து வெளியில் எடுத்தேன். என் கையிலிருந்தது ஒரு தண்ணீர் பாம்பின் தலை...?

- பூமி ஞானசூரியன்

கடிதம் 38.

மழைக்காட்டு மரங்களைப்

பாதுகாக்கும் 

மாஸ் எனும் படர்பாசிச் செடிகள்

MOSS SHIELD RAIN FOREST TREES

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்.? உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது  அன்பு விசாரிப்புகள்.

இன்றைய கடிதத்தில். மழை, காட்டு மரங்கள் மற்றும் இதர தாவரங்கள் மீதும் வளரும் மாஸ் என்னும் பாசிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

மாஸ் என்றால் என்ன?

சொல்லுகிறேன்.

பூவும் இல்லாமல், வேரும் இல்லாமல், பச்சைப் பூப் போல வளரும்

MOSS ON GLAZIERS

மாஸ் என்னும் பாசி.

இதில் பல வகை உண்டு.

மார்ச்சன்ஷியா, ரிக்சியா,  ஸ்பேக்னம் மற்றும் பாலிடிரைக்கம், இவை எல்லாம் பாசியின் பெயர்தான்.

மழையில் இருந்தும், குளிரில் இருந்து தப்பிக்க மழை காட்டு மரங்கள் போட்டிருக்கும் பாசி கம்பளிச்சட்டைகள்.

MOSS CONSERVE VEGETATION

இவை  மாஸ் எனும் படர்பாசிச் செடிகள்.

மழைக் காடுகளில் கிடைக்கும் மிகுதியான மழை, மற்றும் அதன் ஈரப்பதம். இந்த பாசி இனங்கள் வளர வாய்ப்பும் வசதியும் தருகின்றன.

மரங்களின் எல்லா பகுதிகளிலும் இந்த மாஸ் எனும் பாசி படிந்து வருகின்றன.

அடிமரம்

நுனிமரம்

கிளைகள்.

குச்சிகள்.

சிம்புகள்.

மரங்கள் நின்றிருக்கும் நிலப்பகுதி.

MOSS REMOVES CARBON
ஒரு மரத்தின், ஒரு தாவரத்தின் துணை இல்லாமலும் இந்த பாசி இனங்களால் வளர முடியும்.

இன்னொரு தாவரத்தின் ஊட்டச்சத்துனை உறிஞ்சி எடுக்காமலேயே தன்னிச்சையாக இவற்றால் வளர முடியும்.

இந்த மாஸ் பாசி இனங்கள். மரங்களில் ஒண்டிக் குடித்தனம் நடத்தினாலும். பல உயிரினங்கள் வாழ இடம் தருகின்றன.

மழை காடுகள், எப்படி இல்ல உயிர்களுக்கும் உதவுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

மழைக் காடுகளின் சூழல் மேம்பாட்டுக்கும் உதவுகிறது என்பதற்கு இது உதாரணம்.

இந்த மாஸ்பாசி மழை நீரை உறிஞ்சி தன் உடம்பில் சேமித்து வைத்துக் கொள்கிறது.

மழை இல்லாத போது கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் உலர்ந்து போகாத வண்ணம் தவணை முறையில் தந்து உதவுகிறது.

மழைக்காடுகளின் சூழல் எப்போதும் ஈரப்பதம் நிறைந்ததாக விளங்க உதவுகிறது.

இந்த மழைக் காட்டு “மாஸ்” என்னும் பாசி  குறைவான வெளிச்சத்திலும் நிறைவான உணவைத் தயார் செய்கின்றன.

எந்தச் சூழலுக்கும்  ஏற்புடையவை களாக தங்களை மாற்றிக் கொள்கின்றன.

அதிகப்படியான ஈரத் தன்மை

 குறைவான வெளிச்சம்

நிழலான சூழல்

MOSS CONSERVES RAIN

எப்படி இருந்தாலும் திறமையாக ஒளிச்சேர்க்கையை செய்து முடிக்கின்றன.

அதிகப்படியான மழை பெய்யும் போது மரத்தின் பட்டைகள் கரைந்து போகாமல் காப்பாற்றும்.

அவை உடைந்து போகாது.

சிதைந்து போகாது

பட்டைகளுக்கு மட்டுமல்ல மரங்களையும் மகத்துவம் மிக்க கவசமாக நின்று காப்பாற்றுகின்றன.

பெய்யும் பெருமழை பெய்யும்போதும் வேகமாக விரைந்தோடும் நீராக மாறாமல் இருக்க இது ஒரு தடுப்பணை ஆகிறது.

“மரங்களின் மீது படர்ந்து இருக்கும்  பாசியின் அளவு சொல்லுங்கள்.”

“அதன் ஈரத்தன்மை அளவைச் சொல்லுங்கள்”.

“ நான் அந்த மழைக்காட்டின் மகிமையைச் சொல்லுகிறேன்” என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்

அதனை  “பயோ இண்டிகேட்டர்ஸ்” என்று சொல்லுகிறார்கள். உயிரோட்டத்தின் அடையாளம் எங்கிறார்கள்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” அது போல. மழைக்காட்டின் மாண்பு மாஸ் எனும் இந்தப் பாசியில் தெரியும்.  

அதிக ஈரப்பதம் அதிக  மாஸ் பாசிகள் இனப்பெருக்கம் செய்ய  உதவும்.

அதன் விதைகள் உற்பத்திக்கும் உதவும்.

பல்கிப் பெருக உதவும்.

கார்பன் என்னும் கரியும் சேமிக்க உதவும்.

மரங்கள்  கார்பனை சேமிப்பது  மாதிரி மாஸ் பாசிகளும் சேமிக்கின்றன.

ஒலிம்பிக் மழைக்காட்டில்  நாங்கள் நுழைந்ததும் 200 அடி முதல் 300 அடி உயரமான மரங்கள், “மாஸ் கம்பளி ஆடை” அணிந்தபடி எங்களை வரவேற்றன.

அதிகப்படியான மரங்கள் அங்கு  அடிமரம் பருத்து இருந்தன.

நோஞ்சான் மரங்கள்  என்று எதையும் பார்க்க முடியவில்லை.

ஆனால் சின்ன மரம் பெரிய மரம் என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா மரங்களிலும் மாஸ் பாசிகள் கூடு கட்டியிருந்தன.

முதலில் மழை காட்டுக்குள் இறங்கி நடக்கும் போது அதிகமாக மாஸ் படிந்த  மரங்களை புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஆனால் எல்லா மரங்களுமே மாஸ் என்னும் கம்பளி ஆடைகளை தலை முதல் கால் வரை அணிந்திருந்தன.

நாங்கள் ஒலிம்பிக் மழை காட்டுக்குள் நுழையும் போதே பகல்  12 மணி இருக்கும்.

அப்போது கூட நாங்கள் பயணம் செய்த சாலை முற்றிலுமாக புகைப் பனியில் மூழ்கி இருந்தது.

இது புகைப்பனியா மூடு பனியா என்று காருக்குள் நாங்கள் ஒரு பட்டிமன்றமே நடத்தினோம்.

என் மகன் என் மருமகள். என் மனைவி என்று மூவருமே. இந்த பட்டி மன்றத்தில். சமமாக வாதிட்டார்கள்.

நான் பட்டிமன்ற நடுவராக இருந்துவிட்டேன்

MOSS RULES THE
RAIN FOREST

ஆனால் தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை.

இந்த தேசியப் பூங்கா வாஷிங்டன் மாநிலத்தின் மிகப் பெரிய தேசிய பூங்கா.

இந்த பூங்காவில் இருக்கும் மொத்த மரங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன்.

ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம் என்று நினைத்துப் பாருங்கள்.

எனக்கு மலைப்பாக இருந்தது.

வெறுமனே இதனை தேசியப் பூங்கா என்று சொல்ல முடியாது.

இது இந்த பகுதியின் சூழல் அடையாளம்.

இங்கு வாழ்ந்த வாழும் பழங்குடி மக்களின் கலாச்சார அடையாளம்.

அவர்களின்  வாழ்வாதாரத்தோடு ஒரு நெருக்கமான தொடர்பு உடையதாக. இருந்தது.

இன்னுமும் இருக்கிறது.

இது வாழும் அடையாளமும் கூட.

இந்த தேசிய பூங்காவின் மழைக்காடுகளுக்கு “ஹாஹ் மழைக்காடு என்று பெயரிட்ள்ளார்கள்.

‘ஹாஹ்’ என்பது இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களின் பெயர்.

இதன் உயரமான பகுதி மற்றும் கவர்ச்சிகரமான பகுதியின் பெயர் “ஹர்ரிகேன் ரிட்ஜ்” என்று சொல்லுகிறார்கள்.

இதனை தமிழில் புயல் முனை. நல்லது புயல் மேடு என்று சொல்லலாம்.

நாங்கள் புயல் முனையை தொட்டுவிட்டுத் தான் வந்தோம்.

பக்கத்து  மலை முகடுகளை மூடியபடி மேகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

சட்டை, ஸ்வெட்டர், ஜெர்கின் எல்லாவற்றையும் தாண்டி குளிர்  உள்ளே நுழைந்து எங்கள் நுரையீரலைத் தேடிகொண்டிருந்தது.

ஒரு மெல்லிய டி சட்டையும்  ஒரு அரைக்கால் சட்டையும்  போட்டுக்கொண்டு  நிறையபேர்  எப்படி அலைகிறார்கள் ?

அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது.

அவர்கள் எல்லாம் இளைஞர்கள்.

 நான் எழுபத்து இ ரண்டில் இளைஞன்.

பலர் அங்கு பாய்விரித்திருந்த புல்வெளியின் ஊடாக செல்லும் நடைபாதைகளில் நடந்து சென்றார்கள்.

ஏற்கனவே நடந்து போனவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

கார்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஊடாக செல்லும் நடைபாதைகளை “டிரெயில்” என்று சொல்லுகிறார்கள்.

அங்கு கார்களை பார்க்கிங் செய்ய நிறைய இடம் இருந்தது.

KALYANI WITH
MOSS TREES

“கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வரலாமா?” என்று கேட்டான் என் மகன்.

என் மனைவியால் அதிக தூரம் நடக்க முடியாது.

அதனால் “ நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு  அப்படியே அங்கு உட்கார்ந்தோம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை கம்பளம் விரித்தது போல பசுமையான புல்வெளிகள்.

ஊடாக மஞ்சள், சிவப்பு மற்றும் ஊதா என்று காட்டு பூக்கள் திட்டு திட்டாக பூத்துக் கிடந்தன.

ஒலிம்பிக் நேஷனல் பார்க்கில், குறிப்பாக பூங்காவின் மேற்குப் பகுதியில் இந்த மழைக்காடுகள் அமைந்துள்ளன.

இந்த ஹாஹ் மழைக்காட்டில் ஆண்டு சராசரி மழையாக 150 அங்குலம் கிடைக்கிறது.

BHUMII GNANASOORIAN
WITH MOSS TREES

அதனால் தான் இது எப்போதும் ஈரத்தன்மையுடன் கூடியதாக இருக்கிறது இந்தப் பகுதி.

ஆக வனமும் மனமும் ஈரமுடன் இருக்க வேண்டும்.

 இதை  நினைவுபடுத்துகிறது மழைக்காட்டு மரங்களின் மாஸ் எனும் படர்பாசிச் செடிகள்.

 இன்றையக் கடிதம் பிடித்திருந்தால் உங்கள் கருத்தை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்தக் கடிதத்தில் சந்திப்போம், நன்றி வணக்கம் !

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...