Saturday, July 1, 2023

KARUNOCHCHI REGULATES MENSTRUAL CYCLE IN WOMEN 205. மக்கர் பண்ணும் மாதவிடாய்க்கு மருந்து கருநொச்சி

 

மக்கர் பண்ணும் மாதவிடாய்க்கு
மருந்து கருநொச்சி


(KARUNOCHI,  ASIAN WATER WILLOW, WILLOW LEAF JUSTICIA, JENDARUSSA VULGARIS, ACANTHACEAE)

தாவரவியல் பெயர்: ஜெண்டுரூசா வல்காரிஸ் (JENDARUSSA VULGARIS)

தாவரக் குடும்பம் பெயர்: அகாந்தேசி (ACANTHACEAE)

பொதுப் பெயர்கள்: வில்லோ லீஃப் ஐஸ்டீசியா, ஏசியன் வாட்டர் வில்லோ (WILLOW LEAF JUSTICIA, ASIAN WATER WILLOW)

தாயகம்: சைனா

நொச்சி மரத்தின் இலைகள் பார்க்க மயிலின் பாதம் போல இருக்கும். அதனால் இதனை மயிலடிச் செடிகள்என்று சொல்லுகிறது சங்க காலத்து தமிழ் இலக்கியம்.            

  “மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி

 அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த

   மணி மருள் பரவின் பாடுநனி கேட்டே” – (கொல்லன் அழிசி – 138 வது பாடல்               குறுந் தொகை)

நொச்சிப் பூ உதிரும் நடுராத்ரியில் வருவேன் என்றான். அவனுக்காக அவள் காத்திருந்தாள். ஊர் உறங்கிவிட்டது. மயிலடி போன்ற இலைகளை உடைய நொச்சி மரங்கள், தங்கள் பூக்களை ஒசையுடன் உதிர்க்கின்றன: எப்படித்தான் ஊர் உறங்குதோ? பாழாய்ப்போன தூக்கம் எனக்கு மட்டும வராமல் அடம்பிடிக்கிறது ?’ என்கிறாள் அந்தப் பெண். அதுதான் இந்த குறுந்தொகைப்பாட்டு.

கருநொச்சி கிழக்காசிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது: சீனா, பாகிஸ்தான், இந்தியா, ஸ்ரீலங்கா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, மிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும். 

புளோரா ஆப் சைனாஎன்ற ஒரு வலைத்தள செய்தியில் இந்தியா உட்பட மேலே சொல்லப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளை கருநொச்சியின் சொந்தமண் என்றும் குறித்துள்ளது. அப்படிப் பார்த்தால் கருநொச்சியும் நம்ம ஊர் மரம்தான்.          

கருநொச்சியின் பல மொழிப் பெயர்கள்:

தமிழ்: கருநொச்சி, வாடைக்குட்டி (KARUNOCHI, VADAIKUTTI)

இந்தி: நீலி நர்கண்டி, காலா பாசிம்ப், காலா ஆடுல்சா (NILIKANDI, KALA PASIMB, KALA ADULSA)

மலையாளம்: கரு நொச்சி, வட கொடி (KARUNOCHI, VADAKODI)

தெலுங்கு: அட்டசரமு, கந்தர சாமு, நல்ல நொச்சிலி, கந்தரசாமு (ATTASARAMU, KANTHARA SAMU, NALLA NOCHILI, KANTHARASAMU)

கன்னடா: ஆடு தொட்டகிகா, கரலகிட்டி, கரிநேக்கி (AADU DHOTTAKILA, KARALAKIDDI, KARINOKKI)

ஒரியா: நில நிர் குண்டி (NILA NIR KANDI)

பெங்காலி: ஐகத் மாடன் (JAGATH MODAN)

அசாமிஸ்: ஜிட்டா பஹாக், பில்யா கரணி (JITTA BAHAK, BILYA KARANI)

சமஸ்கிருதம்: கந்தரசா, இந்திராணி, கப்பிகா, கிருஷ்ண நிர்குண்டி (SUNDARASA, INDIRANI, KAPPIKA, KRISHNA NIRGUNDI)

மராத்தி: பகாஸ், காலா அடுலசா (BAHAS, KALA ADULASA)

இந்தோனேசியா: கண்டாருசா, பெசி பெசி, காவோ (KANDARUSA, BESI, KAVO)

மலேசியா: கண்டாருசா, டெமிங்;காங் மெலிலா, உரட் சுகி (KANDARUSA, DEMING GONG MELILA, URAT SUKI)

தாய்லாந்து: சியாங் பிரா மான், பாங் டாம், கிராடுக் கெய்டம் (SIYANG BRA MAN, BONG DOM, GRADU KEYDOM)

வியட்நாம்: டாஃபென், கூவ்ரு (TAFEN, KOOVRU)

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

நொச்சி என்றாலே மூலிகை என்று அர்த்தம். அதிலும் கரு நொச்சி மிகவும் அரிதான மூலிகை மரம்.  கருநொச்சியிலிருந்து ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். விரைவில் அந்த மாத்திரை வெளிவர உள்ளது.

இதற்கான அடிப்படை ஆராய்ச்சிகள் அநேகமாக முடிந்துவிட்டன. இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்கள் இதில் முனைப்பாக உள்ளார்கள். அதுபோல எச்.ஐ.விஎய்ட்ஸ் வைரஸ்ன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் கருநொச்சிக்கு உண்டு என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

ஆண்கள் கருத்தரிப்பைத் தள்ளிப்போடலாம்

இந்தோனேசியாவைச் சேர்ந்த பப்புவா மாநிலத்தில் (POPUA PROVINCE) பல காலமாக, கரு நொச்சியை, ஆண்கள் கருத்தரிப்பைத் தள்ளிப்போட பயன்படுத்தி வருகிறார்கள்.  இதனைத் தெரிந்து கொண்ட பல்கலைக் கழக பேராசிரியர், ஒருவர் 1985 ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினார்:

இன்று சாதா மாத்திரை குழாய் மாத்திரை எல்லாம் தயார் என்கிறார். இது வெளி வந்தால் உலகின் முதல் ஆண்கள் கருத்தடை மாத்திரை இதுதான். உலகம் முழுவதும் இது வலம் வர உள்ளது: நீயா நானா ?’  என்று சீனாவும், அமெரிக்காவும் மாத்திரை உரிமை வாங்க குதிரை பேரம் நடத்துகின்றன.

இதுபற்றிய சோதனை செய்ததில் 99.969 % இந்த மாத்திரைகள் பவர்புல்’;  என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது வெளிவந்தால் அகில உலகையும் இது புரட்டிப்போடும் என்கிறார்கள். மிகப் பெரிய அலையே உருவாகும் என்கிறார்கள், ஆராய்ச்சிக்காரர்கள்.

பப்புவா மாநிலத்தின் பழங்குடி மக்களின் பழக்கம்

பப்புவா மாநிலத்தின் பழங்குடி மக்களிடையே இந்தப் பழக்கம் வெகு காலமாக உள்ளது. பப்புவா இந்தோனேசியாவின் ஒரு பகுதி. இந்த பழங்குடியில் ஆண்களில் அத்தனை உருப்படியும் இந்தக் கருநொச்சி கஷாயத்தை, உடலுறவுக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகக் குடிக்கிறார்கள். கருத்தறிப்பு போயேபோச்என்கிறார்கள்.  

இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தியும் பப்புவாவில் உள்ளது. இந்தப் பழங்குடிப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளைக்கு டவுரி’  தரவேண்டும். இதைத் தவணை முறையில்கூட தரலாம். இந்த வரதட்சிணைப் பணம் வசூல் ஆகும்வரை இந்தப் பெண்களை கருத்தரிக்க விடமாட்டார்கள். பாவி மக்கள் அதுவரை கருநொச்சி கஷாயம் குடிப்பார்களாம் இங்கு உள்ள ஆண்கள்.

அதிக மக்கள் தொகை என்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, இந்தோனேசியாவில். அதனால் இந்த மாத்திரை கொண்டுவருவதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.  இந்தப் பிரச்சினை இன்னும் கூர்மையாக உள்ள சீனாவும் மற்றும் இந்தியாவும்கூட கருநொச்சித் திட்டத்தை கக்கத்தில் வைத்திருக்கலாம்.

மக்கர் பண்ணும் மாதவிடாய்

கருநொச்சி பல்வேறு நோய்களை குணப்படுத்தும். உதரணமாக முகவாதம்  இடுப்புவலி , மக்கர் பண்ணும் மாதவிடாய், கரப்பான் புண், செபலேயா தலைவலி, ஒற்றைத் தலைவலி, மேக வெட்டை நோய், காதுவலி, மற்றும் கைகால் வீக்கம்.

கருநொச்சி பலவிதமான மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டது: நோயகற்றி, வியர்வையுண்டாக்கி, சிறுநிர் கழிவு தூண்டி, மலமிளக்கி, நீர்கடுப்பு நீக்கி, நச்சு எதிர்ப்பி ஆகியவை.

நொச்சியில், வெண்நொச்சி, கருநொச்சி என இரண்டு வகையான நொச்சி வகைகளைச் சொல்லுகிறார்கள். இதில் கருநொச்சி மிகவும் அரிதானது. ஏறத்தாழ இது அற்றுப் போகும் நிலையில் உள்ளது. காரணம் இது ஒரு அற்புதமான மூலிகை என யாருக்கும் தெரியாததுதான். ஆனால் ஒரு கிலோ கரு நொச்சி இலைகள், 500 முதல் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

கொசுவத்திச் சுருளை தூக்கியபடி பறக்கும் கொசுக்கள்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கொசுக்களை ஒழிக்க வீடுகளில் நொச்சிச் செடிகளை வளர்க்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கொண்டுவந்தது. அந்தத் திட்டம் குறித்த விவரம் தெரியவில்லை. கிராமத்தில் சாயங்காலம் ஆனால் நொச்சித் தழைகளைப் போட்டு புகைபோடுவது வழக்கமாக இப்போதும் உள்ளது.

நொச்சிப்புகை போட்டால் ஒரே ஒரு கொசு கூட வராது. ஆனால் இன்று கொசுவத்திச் சுருள்களை கொசுக்கள் தூக்கிக் கொண்டு பறந்தாலும் பறக்கும் என்ற  அளவுக்கு கொசுக்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.

நொச்சிமாலை அணிந்து போரிட்ட தமிழ் வீரர்கள்

சங்க இலக்கிய காலத்தில், ஒரு நாட்டின் கோட்டையை முற்றிகையிட்டு போர்புரியும் போது, கோட்டைக்குள் இருக்கும் மன்னன் தனது கொட்டையை விடுவிக்க, தனது படைவீரர்களுடன் நொச்சிமாலை அணிந்து போரிடுவான்.

இதற்குப் நொச்சித் திணை, என்று பெயர். நொச்சி மரம் என்பது தமிழ் மக்களின் கலாச்சாரத்துடன் நெருங்கி தொடர்புடைய மரம். ஆனால் இன்று அதன் மருத்துவப் பண்புகளைப் பார்த்து பல நாடுகள், மூக்கின் மேல் விரல் வைக்கின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...