Friday, June 30, 2023

WHO BLESSED THE COLOUR & BEAUTY TO MAYILKONRA I74. மயில் கொன்றைக்கு நிறம் தந்தது யேசுவின் ரத்தமா?

மயில் கொன்றைக்கு  நிறம் தந்தது
யேசுவின் ரத்தமா? 

(MAYIL KONRAI, FLAME OF FOREST, DELONIX REGIA, FABACEAE)

தாவரவியல் பெயர்: டிலானிக்ஸ் ரீஜியா (DELONIX REGIA)  

பொதுப்பெயர் ராயல் பாயன்சீயனா, ஃபிலேம் ஆஃப் ஃபாரெஸ்ட் (ROYAL POINCIANA, FLAME OF FOREST)  

தாவரக்குடும்பம் பேபேசியே (FABACEAE)

மயில்கொன்றைப் பூக்கள் ரத்தச் சிவப்பு நிறத்தைப் பெற்றது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு ? இதற்கு கொஞ்சம் பைபிள் படிக்க வேண்டும்.

கேரளாவில் மயில்கொன்றை மரத்தின் பெயர் கல்வாரிப்பூ மரம். கிறிஸ்துவ மக்களுக்கு அறிமுகமான பெயர் கல்வாரி. கல்வாரி என்றால் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு மலைத்தொடர். இங்குதான் கிறிஸ்து ஏசுவை சிலுவையில் அறைந்தது.

கல்வாரி மலையில் ஏசுவை சிலுவையில் அறைந்தபோது அவர் உடலிலிருந்து தெறித்த ரத்தம் ஒரு மரத்தை  நனைந்தது. அந்த மரம் முழுமையாக கிறிஸ்து ஏசுவின் ரத்தத்தில் குளித்தது எனலாம். அந்த மரம்தான் மயில்கொன்றை. ஆக ஏசுநாதரின் ரத்தச் சிவப்புதான் மயில்கொன்றை பூக்களில் இருக்கும் சிவப்பு நிறம்.

அதனால்தான் கேரள கிறிஸ்துவச் சகோதரர்கள் இதற்கு வைத்திருக்கும் பெயர் கல்வாரிப் பூக்கள். இது செயிண்ட் தாமஸ் கிறிஸ்டியன்ஸ் அல்லது சிரியன் கிறிஸ்டியன்ஸ் ஆப் இண்டியா என்ற பிரிவினரின் நம்பிக்கை இது. 

நிறையபேருக்கு மயில்கொன்றையை ஒரு அழகு மரமாக மட்டுமே தெரியும். ஆனால் அது பலவகைகளில்  உதவுகிறது. இதன் விதைகளில் 18 முதல் 27..5 சதவிகித எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயின் பெயர் பங்கம் மற்றும் கரங்கா (PANKAM & KARANGA).  இதனை தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் எடுத்த பின் பிண்ணாக்கை உரமாக பயிர்களுக்குப் போடலாம். கோழித் தீவனமும் தயார் செய்யலாம்.

இதன் விதைகள் மருந்தாகவும் உபயோகமாகிறது. இதில் கோழித் தீவனமும் தயாரிக்கலாம். இதன் விதைரத்தத்தை சுத்தப்படுத்தவும், கைகால் வீக்கம், காதுவலி, மார்புவலி போன்றவற்றை குணப்படுத்தவும் உதவும்.

மயில்கொன்றையின் இலைகளை அரக்குப்பூச்சிகளுக்கு தீவனமாகிறது. முரத்தை வேளாண்மைக் கருவிகள், கருவிகளின் கைப்பிடிகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுத்தலாம். 

மயில்கொன்றை மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: மயில் கொன்றை (MAYIL KONRAI)

இந்தி: குல்மோகர்(GULMOHAR)

பெங்காலி;: கிருஷ்ணசூரா (KRISHNASURA)

கன்னடம்: கெம்ப்பு டோரை (KEMPU TORAI)

அரபி: சாஹா எல் கான்னா (SAHA EL KHANNA)

பின்னிஷ்: ஹெலோலீக்கிப்பு  (HELOLIKKIPU)

 ‘அழகு மரத்திற்கான உலகக் குத்தகை என்னோடதுதான்’  என்று சொல்லும்படி உலகம் பூராவும் பூத்துக் கிடக்கும் மரம் பாரெஸ்ட் பிளேம்என்னும் மயில்கொன்றை.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க திரும்பிய பக்கம் எல்லாம் அழகுக்காக வளர்க்கப்படும் ஒரே மரம், மயில் கொன்றை. சுட்டெரிக்கும் வெயலில் இலை இல்லாமல் பூக்குடை பிடித்தபடி நிற்கும் பல மயில்கொன்றை மரங்களைப் பார்த்து ஆச்சிரியப் பட்டிருக்கிறேன்.

மயில்கொன்றயின் மருத்துவ குணம்

அழகு மரம் ஆனாலும் நீரிழிவு, பேக்டீரியல் நோய் மற்றும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்கிறது அண்மைக்கால ஆராய்ச்சி.

தீப்பிடித்து எரிவது போல பூக்கும்

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் மரம் முழுவதுமாய்  தீப்படித்து எரிவது போல பூக்கும். தனிப் பூவைப் பார்த்தால் ஒரு சிவப்பாய் ஒரு மயில் தோகை விரித்தது போலிருக்கும். ரொம்ப உயரமாகவும் வளராது, குட்டையாகவும் வளராது. ஆனால் 5 முதல் 10 மீட்டர் உயரம் வரை சிரமமில்லாமல் வளரும்.

இதன் பூக்களைவிட இலைகள் அழகானவை; பெண்களின் கால் பட்டடை போன்ற. இந்த இலைகளை எந்த ஓவியன் வரைந்து வடிவமைத்திருப்பான் ?

உருவிய வாள் மாதிரியான  முரட்டு நெற்றுப் பெட்டிகளில்  தெறிப்பான பேரீச்சை விதைகள் போல அழகாய் அடுக்கி இருக்கும். கொஞ்சம் பலாத்காரம் செய்துதான் விதைகளை எடுக்க வேண்டும். இதன் விதைகள் கொஞ்சம் முரட்டுத்தனமானவை. கத்தி,  சுத்தி என ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டும்.

விதைகளை கொதிக்கும் நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதைத்தால் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும்.

மழைக் காலத்தில் இந்த மரத்தடியில் ஏராளமான கன்றுகள் முளைத்திருக்கும். கொஞ்சம் வளர்ந்த கன்றுகளை பாக்கட்டுகளில் எடுத்து நடலாம். பின்னர் 6 முதல் 8 மாதக்கன்றுகளை தேவைப்படும் இடங்களில் நடலாம்.

எனக்கு இதுதான் வேண்டும் ! அதுதான் வேண்டும் என கட்டுப்பாடுகள் போடாது ! எந்த மண்ணுக்கும் சம்மதம் சொல்லும் சாமானிய மரம் ! கடினத் தன்மை கொண்ட மற்றும் களிமண்பாங்கான மண்ணில் வளர கொஞ்சம் யோசனை செய்யும்.

வறட்சி மற்றும் உப்புத்தன்மை உள்ள மண்ணையும் தாங்கி வளரும். வடிகால் வசதிகொண்ட மணல்சாரி மற்றும் இருமண்பாடான நிலத்தையும் டபுள் ஓகே சொல்லும் மரம்.

ரொம்ப நாள் வரை எனக்கு இது ஆப்பிரிக்க நாட்டின் மடகாஸ்கர் தீவுக்கு சொந்தமான மரம் என்ற உண்மை தெரியாது. தெரிந்திருந்தால் கொஞ்சம் குறைவாக ரசித்திருப்பேனோ ?

இது மடகாஸ்கர் மரமாக இருந்தால் கூட காற்றின் வேகத்தைக் கட்டப்படுத்த, தூசியை  வடிகட்ட, காற்றை சுத்தப் படுத்த மாட்டேன் என மறுக்காது. நல்லது செய்யுமே தவிர கெட்டது செய்யாது. காரணம் அது மரம்.

பட்டிமன்ற பேச்சாளப் பெருந்தகைகளுக்கு ஓரு வேண்டுகோள் ! உங்களுக்கு ஒரு நல்ல பட்டிமன்ற தலைப்பை நான் பணிவுடன் பரிந்துரை செய்கிறேன். இட்லிக்கு மிகவும் தேவைப்படுவது சட்னியா சாம்பாரா ?’ என்று பேசுவதைவிட இந்த தலைப்பு கவுரவமாக இருக்கும்.

இதோ தலைப்பு மயில் கொன்றை மரத்தின் இலை அழகா பூ அழகா ?”         

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

THE FIRST BOOK ON 100 TAMIL RIVERS - நூறு தமிழ் ஆறுகள் பற்றிய புதிய நூல்

நூறு தமிழ் ஆறுகள்  புதிய நூல்  எழுதியவர்  பூமி ஞானசூரியன் STORY OF 100 RIVERS நூலின் 15  சிறப்புகள் 1. தமிழகத்தின் 100 ஆறுகளை பதிவு செ...