Wednesday, June 21, 2023

PERUMALARALI DEVINE TEMPLE TREE 78. பெண்களுக்கான தெய்வீக மரம் பெருமாள் அரளி

 

தெய்வீக மரம்
பெருமாள் அரளி 


பெருமாள் அரளி மரம்ஏறத்தாழ நம்ம ஊர் மரமாகவே மாறிப்போனது இந்த மரம், மெக்ஸிகோ, பசிபிக் தீவுகள், கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களை சொந்த பூமியாகக் கொண்ட மரம், மாயா நாகரீகக் காலத்தில், குழந்தைப்பேறு, பெண்கள், பாலியல் உறவு போன்றவற்றிற்கான தெய்வீகமான மரமாக கருதியது, சில பழங்குடி மக்கள் இதனை பேய்கள் மற்றும் துஷ்;ட ஆவிகள் உறைவிடமாகவும் கருதினர், இதன், பூ, இலை,  பட்டை போன்றவை பல நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்தும் உன்னதமான மூலிகை மரம்.

தமிழ்ப்பெயர்: பெருமாள் அரளி, நெலசம்பங்கி (PERUMALARALI, NELASAMPANGI)

பொதுப் பெயர்கள்: டெம்பிள் ட்ரி, பிராங்கிபாணி, புளுமேரியா (TEMPLE TREE, FRANGIPANI, PLUMARIA)

தாவரவியல் பெயர்: பூளுமேரியா ரூப்ரா (PLUMARIA RUBRA)

தாவரக் குடும்பம்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: மெக்சிகோ

பலமொழிப் பெயர்கள்

பெங்காலி: காத் சம்பா (KATH CHAMPA)

இந்தி: சம்பா (CHAMPA)

குஐராத்தி: சம்ப்போ (CHAMPO)

மராத்தி: சாஃபா (CHAFA)

தெலுங்கு: தேவகன்னேரு (DEVA GANNERU)

ஹவாய்: மீலியா (MELIA)

மலையாளம்: பாலா> சம்பகம் (PALA, CHAMPAKAM)

ஸ்ரீலங்கா: அரேலியா (ARELIA)

ஆங்கிலம்  : டெம்பிள் ட்ரீ (TEMPLE TREE)

தாய்: லீலா வாடி (LILAWADI)

பாலினேசியா: டைபேனி (TIPANIE)

பிலிப்பைன்ஸ்: காலா சுச்சி (KALA CHUCHI)

மெக்ஸிகோ, பசிபிக் தீவுகள், கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களை சொந்த பூமியாகக் கொண்டது பெருமாள் அரளி என்று நாம் சொல்லுவது, புளுமேரியா அல்லது பிராங்கிப்பாணி மரம்.

புளுமேரியா ரூப்ரா(PLUMARIA RUBRA) என்னும் இந்த மரம், மிகவும் வாசனையான> வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும்.  இந்த பூக்களின் இதழ்களின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் லைனிங் கொடுத்தது பொல பளிச் சென்று இருக்கும்.

பிராங்கிப்பாணி என்பது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான வாசனைத் திரவியம் (PERFUME).  பாலினேசீயன் கலாச்சார மக்கள் இதனை பூக்களின் ராணி (QUEEN OF FLOWERS) என்று அழைக்கிறார்கள். 

பெண்கள் தங்கள் அன்பை, காதலை வெளிப்படுத்தும் பூவாக இதனை பயன்படுத்தினார்கள். 

வலது காதின் ஒரத்தில் இந்தப் பூவை வைத்துக் கொண்டார்கள் என்றால் காதல் வேகன்சி இருக்கிறது, முயற்சி செய்யலாம் என்று பொருள்.  வலது காதில் வைத்துக் கொண்டால் கல்யாணம் ஆகிவிட்டது..எல்லாம் முடிந்தது மூடிக் கொண்டு போ என்று அர்த்தமாம். 

ஆனால் காதுல பூ என்பதுதான் நெருடலான சமாச்சாரம். காதில் பூ வைப்பதும்> வைத்துக் கொள்ளுவதற்கும் நமது கலாச்சாரத்தில் வேறு பொருள்> வேறு அர்த்தம். அது உங்களுக்குத் தெரியும்.

இத்தாலியில் மார்கஸ் பிராங்கிபாணி என்பவர் கிளவுஸ் எனும் கையுறைகளுக்கு (GLOVES) நறுமணம்தர ஒரு வகை வாசனைத் திரவியத்தை உருவாக்கினார். 

அதற்குப் பிறகுதான் நமது புளுமேரியா மரமும் அதன் பூக்களும் அறிமுகம் ஆனது.  அந்த பூக்களின் வாசனையும் பிராங்கிப்பாணி யின் பெர்பியூம் மாதிரியே இருந்தால், இதற்கும் அந்தப் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர். 

துதான் பெருமாள் அரளி பிராங்கிப்பாணி ஆனதன்  நாமதேய சரித்திரம்!

இதன் மரம் கிளைகள் எல்லாமே மிகவும் மிருதுவானவை.  நகத்தால் கிள்ளினால் கூட நகம் புதையும், அந்த காயத்தில் பால் வடியும், இந்த மரங்கள் பெரிய செடி மற்றும் சிறிய மரம்.

பெருமாள் அரளியின் வாசனையால் கவரப்படும் பூச்சிகள் தேன்தேடி வந்து ஏமாந்து போனாலும், மகரந்தசேர்க்கைக்கு உதவ மட்டும் மறப்பதில்லை.  இதன் பூக்களில் தேன் கிடையாது, பூச்சிகளின் புத்தியைக் கிரங்க வைக்கும் வாசனை மட்டும் உண்டு.

இதன்கிளைகளை வெட்டிவைத்தால் சுலபமாக வளரும்.  வெட்டிய கிளைகளை ஐந்து பத்து நாட்களுக்கு வெய்யிலில் வாட்டி வதக்கி அதன் பின்னர் நட வேண்டும். 

ரொம்பவும் ஈரமுள்ள மண்கண்டத்தில் நட்டால் இந்தக் கிளைகள் அழுகிப்போகும்.  வெட்டியவுடனும் புத்தம் புதிதாகவும் நடுவது நல்ல பலனைத் தராது.  கிளைகளில் இருக்கும் இலைகளை நீக்கி விட்டு வெய்யிலில் வதக்கி நடலாம்.

மாயா காலத்து மரம்

மாயா நாகரீகக் காலத்திலும் (MAYA CIVILIZATION) மெக்சிகோவில் நிலவிய அஸ்டெக் (AZTEC – MESO AMERICAN CULTURE) அரசாட்சிக் காலத்திலும் பெருமாள் அரளி மரங்களை, சிறுதெய்வ வழிபாட்டுக்குரியதாக வணங்கி வந்தார்கள்.  குறிப்பாக குழந்தைப்பேறு> பெண்கள்> பாலியல் உறவு போன்றவற்றிற்கான தெய்வீகமான மரமாக கருதி வந்தனர்.

சில பழங்குடி மக்கள் இதனைப் பேய்கள் மற்றும் துஷ்;ட ஆவிகள் உறைவிடமாகவும் கருதி வந்துள்ளனர்.

வேப்ப மரத்து முனீஸ்வரன்

உதாரணமாக நம் ஊர்களில் கூட வேப்ப மரத்தில் முனீஸ்வரன் இருக்கும் என்பார்கள்.

நான் சிறுவயதில், வேப்ப மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்.  கால்கள் இல்லாமல் வெள்ளை வெளேரென்று பறந்துபோகும் படியான மூனீஸ்வரன் இருக்கா என்று உற்றுப் பார்ப்பேன். 

குறிப்பாக உரிம நேரத்திலும் மாலை மயங்கும் நேரத்தில்தான் மூனிஸ்வரன் கண்ணுக்குத் தெரியும்.  இப்போதுகூட வேப்ப மரங்களைப் பார்த்தால் மூனீஸ்வரன் ஞாபகம் வரும்.  ஆனால் இது நாள் வரை> ஒரு நாள் கூட நான் மூனீஸ்வரனைப் பார்க்கவே இல்லை. 

ஆனால் அந்தப் பெயரில் எனக்கு நெருங்கிய நண்பர் உள்ளார்.

முனிகள் எப்படி உருவாகின்றன ? தெரியுமா உங்களுக்கு ? முனிவர்கள் தவம் செய்யும்போது, தங்களுடைய நிஷ்டையில்  தவறு செய்பவர்கள்> ஈஸ்வரனால் தண்டிக்கப்படுவார்கள். 

அவர்கள்தான் தங்கள் தண்டனைக் காலம் முடியும்வரை மூனீஸ்வரன்களாக அலைவார்கள்.

தேசிய மலராக அங்கீகாரம்

இந்து, ஜெயின், மற்றும் புத்த மதத்துடன் நெருங்கியத் தொடர்புடைய இந்த பெருமாள் அரளி மரம்.

பசிபிக் தீவுகளான தாகித்தி, பிஜி, சமோவா, ஹவாய், நீயூசீலண்ட், போங்க மற்றும் குக் தீவுகளில் விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்களை வரவேற்கவும் விடைதரவும் பெருமாள் அரளி, பூமாலைகளை பயன்படுத்தும், வழக்கம் இன்றும் உள்ளது.

நிகரகுவா மற்றும் லாவோஸ் நாடுகளில் இதனை தேசிய மலராக அங்கீகரித்துள்ளார்கள்.  இந்தியாவில் மேற்கு வங்கத்தில் இதன் பூக்களை சாவு மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தும் பழக்கம் இன்றளவும் உள்ளது. 

அழகுக்கா அரளி மரங்கள்

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மற்றும் மலேசிய நாடுகளிலும், இடுகாடுகள் மற்றும் சமாதிகளில் இந்த மரங்களை நட்டு வைக்கிறார்கள்.  ஆயினும் சாலை ஒரங்கள், பொது இடங்கள், மற்றும் வீட்டுத் தோட்டங்களில் கூட அழகுக்காக பெருமாள் அரளி மரங்களை நட்டு வளர்க்கிறார்கள்.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில், இந்த மரங்களின் பூவாசனையை போன்டியானக் என்ற பெண் பேயின் அடையாள மாக நம்புகிறார்கள்.  இது பற்றிய நாட்டுபுறக் கதைகள் அங்கு நிறைய உள்ளன.

நாக்சம்பா அகர்பத்திகள்

இந்தப் பூக்களின் வாசனை மற்றும் சந்தன மரங்களின் வாசனை இரண்டையும் சேர்ந்த கலவையான வாசனை வரும்படியான பொருட்கள் நாக்சம்பா என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். 

நாக்சம்பா அகர்பத்திகள், சோப்புகள், மெழுகுவர்த்திகள், கழிவறைகளில் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தின் மேற்குமலைத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில், மணமக்கள், திருமணத்தின் போது பெருமாள் அரளிப்பூ மாலைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் இன்றளவும் உள்ளது. 

பல நோய்களை குணப்படுத்தும்

பெருமாள் அரளியின் பூ, இலை, பட்டை போன்றவை பல நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் வேரில் ஒரு சிறிய துண்டினை எடுத்து சுத்தப்படுத்தி, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்துப் பின்னர் வடிகட்டி தினமும் சாப்பிட்டுவர சக்கரை நோய் குணமாகும் என்கிறார்கள்.

நோய் எதிர்ப்புத் தன்மை

அதுபோ அடிபட்டதனால் ஏற்படும் வீக்கங்கள், உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் காயங்கள், மற்றும் புண்களை குணப்படுத்த> செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்ய, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்த, உடலில் ஏற்படும் மருக்கள், பற்குழிகள், பாதவெடிப்பு, தோல் நோய்கள், போன்றவற்றை குணப்படுத்த, இதன் பேர்கள்> இலைகள்> மற்றும் பூக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

தாங்க முடியாத வலி

பற்களில் குழி ஏற்படுவதால் தாங்க முடியாத வலி ஏற்படும்.  தனை அனுபவித்தவர்களுக்கு அதன் வலியின் பரிமாணத்தை உணருவார்கள்.  அப்படிப்பட்ட வலிக்கு சுலமான வழிசொல்லுகிறது பெருமாள் அரளி. 

ஓன்று அல்லது இரண்டு இலைகளை எடுத்து கசக்கிப் பிழிந்து, சாறு எடுத்து> அதனை பஞ்சில் நனைத்து, பல் குழி ஏற்பட்ட வலி எடுக்கும் இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

இந்த மருத்துவ முறைகளை கைக்கொள்ள ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

புதிய வீரிய ஒட்டு ரகங்கள்

தாய்லாந்து போன்ற நாடுகளில் பல்வேறு வண்ணங்களில் புதுப்புது வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கி உள்ளார்கள்.

பெருமாள் அரளி, ஊட்டச்சத்து நிறைந்த மண்ணில்; நன்கு வளரும்.  ஆயினும் களி, மணல், இருமண்மாடான மண்கண்டம் ஆகியவற்றில் நன்கு வளரும். 

நல்ல சூரியவெளிச்சம் மற்றும் நிழலான இடங்களிலும் நன்கு வளரும்.  கிளைகளின் நுனிப் பகுதியை 32 முதல் 60 செ.மீ.  நீளத்திற்கு நறுக்கி பயன்படுத்தலாம்.

FOR FURTHER READING

WWW.THE LIBRARY OF FRAGRANCE.CU. – ‘FRANGIPANI’

WWW.EN.WIKIPEDIA.ORG – PLUMERIA RUBRA

WWW.FLOWERSOFINDIA.NET/COMMON WHITE FRANGIPANI - PLUMERIA RUBRA

WWW.TROPICAL.THEFERNS.INFO/ - PLUMERIA RUBRA – USEFUL TROPICAL PLANTS

WWW.CABI.ORG – PLUMERIA RUBRA (RED FRANGIPANI)

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

    

 

 

      

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...