Friday, June 30, 2023

KARUPPU SAAMBIRANI MARAM BLACK DUMMAR TREE 187. கருப்பு சாம்பிராணி அழிந்துவரும் மரம்

 

கருப்பு சாம்பிராணி
அழிந்துவரும் மரம்


தாவரவியல் பெயர் : கனரியம் ஸ்ட்ரிக்டம் 
(CANARIUM STRICTUM)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பிளாக் டம்மர் ட்ரீ, பிளாக் தூப், தூப் ட்ரீ, இந்தியன் ஒயிட் மகோகனி (BLACK DUMMAR TREE, BLACK DHUP, DHUP TREE, INDIAN WHITE MAGOGANY)

தாவரக்குடும்பம்  :  பர்ஸரேசி (BURSERACEAE)

தாயகம்: இந்தியா

அழிந்துவரும் மரம்

அழிந்துவரும் மரம் என அறிவிக்கப்பட்டுள்ள மரம். மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு உரிய புராதனமான மரம் கருப்பு குங்கிலிய மரம். குங்கிலியம் என்றால் மரப்பால் அல்லது மரப்பிசின் என்பது கழகத் தமிழ் கையகராதி சொல்லும் அர்த்தம். தமிழில் சாம்பிராணி என்கிறார்கள். சாம்பிராணி என்றால் வாசனைப் பிசின் என்று பொருள். ஆங்கிலத்தில் பிளாக் டம்மார் மரம் (BLACK DUMMAR TREE)என்கிறார்கள்.

மடச்சாம்பிராணி என்றால் தமிழில் முட்டாள் என்று ஒரு அர்த்தம் உண்டு. வாத்தியார்கள் பையன்களை அடிக்கடி இப்படி செல்லமாக அழைப்பார்கள். வெறுமென சாம்பிராணி என்று கூட கூப்பிடுவார்கள். நான் கூட அப்படி அழைக்கப் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தத்தை இப்போதுதான் பார்த்து பெருமைப்படுகிறேன். சுhம்பிராணி என்றால் வாசனையான மரப் பிசின் என்று அர்த்தம்.

கருப்பு குங்கிலிய மரத்தின் பல மொழிப் பெயர்கள்:

மரத்தின் தமிழ்ப் பெயர் :-- கருங்குங்கிலிய மரம், கரங்குந்திரிகம், தூபம், ரால்தூப், கருப்பு தமார் (KARUNGKUNGILIYA MARAM, KARANGKUNTHIRIKAM, DHUBAM, RALTHUP, KARUPPU DAMAR)

மராத்தி: தூப் (DHUP)

மலையாளம்: கருத்த குங்கிலியம், குந்திரிக்கம், தெல்லிப்பாயின், விக்ரா, பந்தம், பந்தபயன் (KARUTHTHA KUNGILIYAM, KUNTHIRIKKAM, THELLIPAYIN, VIKRA BANTHAM, PANTHAPAYAN)

கன்னடம்: மந்தடுப்பா, கரிடுப்பா, ஹலிமட்டு, தூபா, நல்ல ரோஜனமு (MANTHADUPPA, KARIDUPPA, HALIMATTU, DHUPA, NALLA ROJANAMU)

இந்தி: நல்ல ரோஜானாமு (NALLA ROJANAMU)

பெங்காலி: கலாதம்மார் (KALADHAMMAR)

தெலுங்கு: கான் குங்கிலியம், கருங்கா குங்கிலியம் (KAN KUNGILIAM, KARUNGA KUNGILIYAM) 

இது நம்ம ஊர் மரமாக இருந்தாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுக்க இது பிரபலம். இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இந்த மரத்தை சிவப்புப் பட்டியலில் (RED LIST)சேர்த்துள்ளார்கள். அப்படி என்றால் ஜாக்கிரதையகப் பார்த்துக் கொள்ளங்கள். இல்லையெனில் காணாமல் போய்விடும் என்று அர்த்தம்.

சாம்பிராணி, கூந்தல் இரண்டுமே தட்டுப்பாடு

நல்ல நாட்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் தலை முழுகி தங்கள் கூந்தலை சாம்பிராணி புகைபோட்டு ஆற்றுவது புழக்கத்தில் இருந்தது. இப்போதெல்லாம் சாம்பிராணி, கூந்தல் இரண்டுமே தட்டுப்பாடாகிவிட்டது.

அது என்ன கம்ப்யூட்டர் சாம்பிராணி ? இன்று கடைகளில் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று வில்லை வில்லையாக விற்பனை செய்கிறார்கள். அது இயற்கையான சாம்பிராணியா ? அல்லது செயற்கையானதா ? தெரியவில்லை.

பால்வடிக்கும் மரங்கள்

இதுபோன்ற பால்வடிக்கும் மரங்களை டிப்டிரோகார்ப்பேசியஸ் (DIPTEROCARPACEOUS) மரங்கள் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் பெரும்பாலும் நிறமில்லா வார்னிஷ், பெயிணட், மருந்துகள் தயாரிக்கிறார்கள். இந்த மரங்கள் தெற்கு ஆசியாவில் குறிப்பாக மலேசியா, சுமத்ரா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

காய்ச்சல், முடக்குவாதம், இருமல், ஆஸ்துமா,

காய்ச்சல், முடக்குவாதம், இருமல், ஆஸ்துமா, காக்காய் வலிப்பு,; நாள்பட்ட தோல் நோய்கள், சிபிலிஸ், ஹெர்னியா ஆகியவற்றை குணப்படுததும் மருந்துகள் தயாரிப்பில் இது உபயோகம் ஆகிறது.

கூரைகளில் சீலிங்போட, தரைகள் மேவ, பிளைவுட் செய்ய, பொருட்களை பேக் செய்வதற்கான  பெட்டிகள் மற்றும் அதர மலிவான மரச் சாமான்கள் செய்ய நன்கு சீசன் செய்யப்பட்ட இதன் மரங்கள் பயனாகின்றன. இதன் விதைப் பருப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய் மிட்டாய் தொழிலகங்களில் உபயோகமாகிறது.

இந்தியாவில் சிக்கிம், அருணாச்சலப்பிரதேஷ், அஸ்சாம், மேகாலயா, ஒரிசா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அந்தமான் ஆகிய இடங்களில் இந்த மரங்கள் 1600 மீட்டர்; உயரம் வரை வளருகின்றன. 

கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலைப் பகுதிகள்

கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலைப் பகுதிகளிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைதிப் பள்ளத் தாக்கிலும் இதனை சாகுபடி செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

சாம்பிராணி மர சாகுபடியை உற்சாகப் படுத்தவதுடன் முறையாக சாம்பிராணிப் பாலை வடித்தெடுக்கும் முறையையும் சொல்லித்தர வேண்டும். இல்லை என்றால் தங்க முட்டை இடும் வாத்தை அறுத்துப் பார்த்த கதை ஆகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

தமிழ்நாட்டில் இந்த மரங்களில் சாம்பிராணிப் பால்வடிக்க தடை உத்தரவு உள்ளது. ஒரு ஆச்சரியமான செய்தி. ஏலக்காய் வியாபாரத்தை முடிவு செய்யும் போடிநாயக்கனூர் மாதிரி, இந்தியாவில் சாம்பிராணி மார்கெட்டை முடிவு செய்வது; விருதுநகர்தான். இந்தியாவில் அகர்வத்திகள் தயார்செய்ய மொத்தம் 18000 மில்லியன் டன் பயன் ஆகிறது.   

சிறுமலைக் காடுகளில் சாம்பிராணி மரங்கள்

வறட்சியான வெப்ப மண்டலப் பகுதிகளில் 20 முதல் 30 மீட்டர் வரை வளரும் இந்திய மரம். பரவலான மண் வகைகளில் வளரும். மணல்சாரி  மண் ஏற்றது. விதை, நாற்று, வேர்க்குச்சி என் தேவைக்கேற்ப வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.

1997 – 98 வாக்கில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த சாம்பிராணி மரங்களை நான் சிறுமலைக் காடுகளில் நான் பார்த்திருக்கிறேன் அன்றுதான் சாம்பிராணி என்பது மரத்திலிருந்து எடுக்கும் ஒருவகைப் பிசின் என்பது தெரியும். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தான் டேராடுனில் முதன் முதலாக கற்பூர மரத்தைப் பார்த்தேன். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.

இவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றால் வரும்காலத்தில் இதுபோன்ற மரங்களை படிக்கமுடியுமே தவிர பார்க்கமுடியாது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...