Friday, June 30, 2023

ANTI-AGING TREE HERB ALINJI 192. இளமையைப் பாதுகாக்கும் மூலிகை மரம் அளிஞ்சி

 

இளமைப் பாதுகாப்பு
மூலிகை  அளிஞ்சி


(ALINGI MARAM, ALINGIUM SALVIFOLIUM, CORNACEAE, SAGE LEAVED ALANGIUM, HILL SACK TREE, STONE MANGO)
 

தாவரவியல் பெயர்: அளிஞ்சியம் சால்விபோலியம்

(ALINGIUM SALVIFOLIUM)

தாவரக் குடும்பம் பெயர்: கார்னேசியே (CORNACEAE)

பொதுப்பெயர்: சேஜ் லீவ்டு ஆலஞ்சியம், ஹில் சேக் ட்ரீ, ஸ்டோன் மேங்கோ (SAGE LEAVED ALANGIUM, HILL SACK TREE, STONE MANGO)

தாயகம்: இந்தியா

அழிஞ்சிமரம் முள்ளுள்ள சிறுமரம், 3 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும்.  இதன் பூக்கள் வெண்மையும் பசுமையும் கலந்த நிறத்தில் இருக்கும்.  பிப்ரவரி முதல் ஜூன் வரையான காலத்தில் பூக்கும்.  பழங்கள் சிறியதாக கோள வடிவில் அழகிய ஊதா நிறத்தில் இருக்கும்.

இதன் வேர்கள் மற்றும் பழங்கள், அக்கி மூட்டுவலி, மூலநோய் நாய்க்கடி, எலிக்கடி, மற்றும் முயல்கடியினால் ஏற்படும் விஷத்தினை முறிக்கவும் பயன்படுத்தலாம்.

அழிஞ்சி மரத்தின் பல மொழிப் பெயர்கள்

பொதுப் பெயர்கள்: சேஜ்  லீவ்டு ஆலஞ்சியம் (SAVE LEAVED ALANGIUM)

இந்தி: தேரா, அங்கால் (AKOL)

தமிழ்: எலங்கி, அலன்டி, அழிஞ்சில் (ELANGI, ALANTI, AZHINJILL)

மலையாளம்: இரிஞ்சில், அங்கோலம் (IRINGIL)

தெலுங்கு: உடுகா சேட்டு, அங்கோலமு (UDUCA SETTU)

பெங்காலி: ஆங்காட், பத் ஆங்காட் (ANCOT, PAT ANKOT)

மராத்தி: ஆங்கால் (ANKOL)

குஐராத்தி: ஆங்கால் (ANKOL)

கன்னடா: அங்கோலா (ANKOLA)

சமஸ்கிருதம்: அங்கோட்டா, தீர்க கீலா (ANKOTA, THEERGA KEELA)

இதன் வேர்ப்பட்டைகள், விதைகள், மற்றும் விதை எண்ணெய், பழங்கள் ஆகியவற்றை பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்தாக பயன்படுத்துகிறோம்.

பழங்கள் குளிர்ச்சியானவை உடலுக்கு ஊட்டம் தரும்.  நோய் எதிர்ப்பு சக்தி தரும்.  நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், சன்ஸ்ட்ரோக், எலும்புருக்கி நோய், சுவாச மண்டலம் தொடர்பான நோய்கள் ஆகிய வற்றை சரிசெய்யும்.

இதன் விதை எண்ணெய், மசாஜ் செய்ய, தோல் சம்மந்தமான நோய்கள், தலைமுடி பராமரிப்பு, ரத்தம் சுக்தி செய்தல், ரத்தப் போக்கு, ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம்.

இளமையை பாதுகாக்கும் அளிஞ்சிமரம்

எல்லாவற்றையும்விட இந்த அழிஞ்சில் எண்ணெயில் அற்புதமான சக்தி ஒன்று உள்ளது.  இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இளமையைப் பாதுகாக்க முடியும் (ALINJI MARAM). சிலர் சீக்கிரமாக வயதானவர்களைப் போல தோற்றம் தருவார்கள்.  

சிலர் அறுபதில் கூட நரைதிரை இல்லாமல் வாலிப முறுக்கோடு இருப்பார்கள்.  உதாரணம் நெல்லிக்காய். நெல்லிக்காயைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயதானது தோற்றத்தில் தெரியாது என்பது ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகி உள்ளது.  அதுபோல, இளமையை இழுத்துப்பிடித்துப் பாதுகாக்கும் மருத்துவ குணங்கள் அழிஞ்சில் எண்ணெயில் அபரிதமாக இருக்கிறது என்கிறார்கள்.

தடுக்கி விழுந்தால் அழிஞ்சில் மரம். 

நான் தற்போது வசிக்கும் பகுதியில் தடுக்கி விழுந்தால் அழிஞ்சில் மரம்.  யாரும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எங்கள் தோட்டத்துக்கு அருகில் செல்லும் சாலை ஒரத்தில் ஒரு மரம் ஏகப்பட்ட பழங்களுடன் காட்சி தரும். 

அழகிய இளம் ஊதா நிறப் பழங்கள். நின்று பார்க்க என்னைவிட்டால்  வேறு ஆள் இல்லை. சிறிய மரம்.  நிறைய கிளைகள்.  இலைகளை எண்ணி விடலாம்.  பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் பழத்தை சாப்பிடலாமாஎன்றேன்.  சாப்பிடலாம்என்றார்.  

ஆனால் சந்தேதத்துடன் சொன்னார்.  அதனால் நான் சாப்பிடவில்லை. ஆனால் என் மனைவி சொன்னார் சாப்பிடலாம் என்று. மறுபடியும் போய்ப் பார்த்தேன். ஒரு மாடு நின்று ரசனையோடு மேய்ந்து கொண்டிருந்தது.

பூக்கும் சமயம் இந்த மரம் கூடுதலான அழகு காட்டும். தூக்கலான வெண்மையுடன் கூடிய பச்சைநிற பூக்கள் மரம் முழுக்கப் பூத்திருக்கும்.    பூவின் இதழ்கள் கீழ்நோக்கி மடிந்து, மகரந்தத் கேசரங்களையும், நடுவில் இருக்கும் ஒற்றை சூலகத்ததையும் தூக்கிப் பிடித்தபடி இருக்கும்.  அழிஞ்சிப் பூக்கள் அழகானப் பூக்கள்.

வாணியம்பாடியிலிருந்து, ஆலங்காயம் வழியாக ஐமுனா மரத்தூர் செல்லும் வழியில் ஏகப்பட்ட அழிஞ்சில் மரங்களைப் பார்க்கலாம்.  என்னுடைய தோட்டத்திலும், பறவைகளினால் உபயம் செய்யப்பட்ட இரண்டு மூன்று  இளம்வயசு மரங்கள் உள்ளன.

 

என்னைச்சுற்றி தெக்குப்பட்டு, வாணியம்பாடி, ராமநாயக்கன் பேட்டை, தும்பேரி, சிக்கனாங்குப்பம், மல்லகுண்டாநாயனசெருவு, புத்துக்கோயில் ஆகிய இடங்களில் எல்லாம், அழிஞ்சி மரங்கள் அடர்ந்து இல்லை எனிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று வணக்கம் சொல்லும்.

ஏகப்பட்ட தமிழ் பெயர்கள்

அழிஞ்சில் மரத்திற்கு ஏகப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உண்டு.  அவை  அழிஞ்சில், ஆண்மரம், அணிஞ்சில், அருளவம், அதிகோலம்,; ஏறழிஞ்சில், இந்திரசாலி, இறங்கழிஞ்சில், கரிக்கோலம், கரியனாச்சான், கொமுமரம், மண்டுகப்பன்னி, உன்னி, ஒருமரம் (ALINJI MARAM)

இதன் பழங்களை இனிப்பாக இருக்கும்.  நாக்கிவ் லேசான கசப்பு தட்டும்.  இதற்குக் காரணம் இதில் கொஞ்சம் அதிகம் இருக்கும் அல்கலாய்டுகள்தான் (ALKALOIDS)

சர்வதேச அளவில், அழிஞ்சில் மரம் பரவி இருக்கும் நாடுகள், இந்தியா, இலங்கை, சைனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்கா.

இந்தியாவில் கேரளாவில் அழிஞ்சில் பரவி இருக்கும் இடங்கள், பாலக்காடு, கோட்டையம், ஆலப்புழா, கொல்லம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் வயனாடு.  தமிழ்நாட்டில் பரவி இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தியாவில் அழிஞ்சில் அதிகம் பரவி இருக்கும் மாநிலங்கள், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மற்றும் உத்தரப்பிரதேசம்.  ஐம்மு காவு;மீர், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உட்பட இந்தியா முழுக்கவே அழிஞ்சி மரங்கள் பரவி உள்ளன.

அழிஞ்சில ஆடுமாடுகளுக்கு நல்ல தீவனம்

அழிஞ்சில் ஆடுமாடுகளுக்கு நல்ல தீவனமாகும், மரங்கள் அடுப்பெரிக்க விறகாகும்.  வயல்களுக்கு வேலி ஆகும்.  பூக்கள் தேனிக்களுக்கு விருந்தாகும்.  உழவுக்கு கருவிகளாகும்.  கருவிகளுக்கு கைப்பிடி ஆகும்.  நோய்க்கு மருந்தாகும். அழிஞ்சில் மரங்களில் மூலிகையாகும்.

அழிஞ்சில், தமிழகத்தில் பல கோவில்களில் ஸ்தலவிருட்சமாக உள்ளது.  கணரக்குடிக்கு அருகில் உள்ள வைரவர் கோவிலிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் உள்ள அஷ்டோத்திர ஈஸ்வரன் கோவிலிலும் ஸ்தல விருட்சமாக உள்ளது.

துஷ்ட ஆவிகளும் ஆத்மாக்களும்

ஒரு காலத்தில் அழிஞ்சில் தெய்வீகத் தன்மை உடைய மரமாகக் கருதப்பட்டது.  அழிஞ்சி மரத்தின் ஒரு சிறிய துண்டினை வீட்டு வாசலில் கட்டிக் தொங்கவிடுவார்கள். 

அப்படி தொங்கவிடப் பட்ட வீடுகளில், பேய் பிசாசுகள் போன்ற துஷ்ட ஆவிகள் அண்டாது என்று நம்பினார்கள்.  எங்கள் பகுதியில் இப்போதுகூட அழிஞ்சி குச்சிகளை வாசலில் கட்டுகிறார்கள்.

இது துஷ்ட ஆவிகளை மட்டும்தான் கட்டுப்படுத்துமாம், துஷ்ட ஆத்மாக்களை ஒன்றும் செய்யாதாம்.

உங்கள் தோட்டத்திற்கு பறவைகள் நிறைய வர வேண்டும் என்று விரும்புபவர்கள், ஒன்றிரண்டு அழிஞ்சில் மரங்களை நட்டு வைக்கலாம்.  பல பறவைகள் இந்த மரக்கிளைகளில் கூடகட்ட விரும்புமாம்.

சின்னக்கவனம் நூற்றெட்டீஸ்வரர் கோவில்

சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள நூற்றெட்டீஸ்வரர் கோவில்என்ற பெயரும் உண்டு.  இந்தக் கோவிலின் பழைய பெயர் சதுர் வேதீஸ்வரர் கோவில்.  ஓரு சமயம் அதத்திய முனிவர் அந்தக் கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டார்.  அப்போது கடவுள் முனிவரே இந்த கோயிலில் 108 நாட்கள் வணங்கினால் காசிக்கு செல்ல வேண்டியதில்லை.  அந்தப் பலன் இங்கு கிடைக்கும்என்றார். 

இதைக் கேட்டதும் அகத்திய முனிவர் அங்கேயே தங்கி தினமும் அருகில் இருந்த ஆரணி ஆற்றில்  குளித்து முடித்த விட்டு, அங்கிருந்த அழிஞ்சி மரத்தடியில் களிமண்ணில் ஒரு லிங்கம் செய்து வைத்து வணங்கினார்.  108 நாட்கள் முடிந்தது.  அவர் வைத்து வணங்கிய 108 லிங்கங்களும் அழிஞ்சி மரத்தடியில் வினாயகர் சிலையாக மாறியிருந்தது.  முதல் நாள் வினாயகரை வழிபடாததால் ஏற்பட்ட வினோதம் இது என புரிந்து கொண்டார், அகத்தியர்.

இப்படிப்பட்ட அதிசயம் நடந்த  அந்த இடத்தில் நந்திவர்மன் ஒரு கோவிலை நிர் மாணித்தான், அந்த அழிஞ்சி மரத்தின் அருகில்.  அந்தக் கோவில்தான் நூற்றெட்டீஸ்வரர்கோவில்.  இன்னும் இருக்கும் அந்த அழிஞ்சில் மரத்தின் வயதின் 2500 ஆண்டுகள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...