Friday, June 30, 2023

AGE-OLD ROADSIDE SHADE TREE PULI 183. சாலையிலே புளிய மரம் ஜமீந்தாரு வச்ச மரம்

 

சாலையிலே புளிய மரம்
ஜமீந்தாரு வச்ச மரம்

(PULI, TAMARIND, TAMARINDUS INDICA, CAESALPINEACEAE )

பொதுப்பெயர்: டேமரிண்ட் (TAMARIND)

தாவரவியல் பெயர் : டேமரிண்டஸ் இண்டிகா (TAMARINDUS INDICA)

தாவரக் குடும்பம்: சிசால்பினியேசி (CAESALPINEACEAE)

தாவரக்குடும்பம் :  சிசால்பினியேசி (PULI, TAMARIND)

தாயகம்: மடகாஸ்கர், சூடான் மற்றும் ஆப்ரிக்காவின் வெப்பமண்டலப்பகுதி மற்றும் இந்தியா

பருப்பில்லாமல் கல்யாணமா ?’ என்பது பிரபலமான தமிழ்ப் பழமொழி. அது போல புளி இல்லாமல் சமையலா ?’ என்று சொல்லும் அளவுக்கு, தென்னிந்திய சமையலறையை ஆட்சி செய்வது புளி. இது நமக்குத் தெரிந்த செய்தி. நமக்குத் தெரியாத செய்தியும் ஒன்று உண்டு. உலகத்திலேயே அதிகப் புளியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். இரண்டாவது நாடு தாய்லாந்து.

இந்தியா புளி புளிக்கும். தாய்லாந்து புளி இனிக்கும். இந்தியா உற்பத்தி செய்யும் புளியில் பாதிதான் தாய்லாந்து உற்பத்தி செய்கிறது.

மடகாஸ்கர், சூடான் மற்றும் ஆப்ரிக்காவின் வெப்பமண்டலம்தான் புளியின் தாயகம் என்கிறார்கள். முதலில் இங்கிருந்துதான் வெளியே போனது. அது மறுபடியும் திரும்பி இந்தியாவுக்கு வந்தது. அதனால் புளிக்கு தாயகம் இந்தியாவும்தான் என்று சிலர் எழுதுகிறார்கள்.

மண்டேலா சிலைக்குப் பின்னால் புளி சாதம் சாப்பிட்டோம்

யார் என்ன எழுதினாலும் புளி சாதம் இல்லாமல் பயணம் போவதுபற்றி யோசிக்க முடியாது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். என் மகனைப் பார்க்க லண்டன் போயிருந்தேன். ஒரு நாள் லண்டன் பார்லிமண்ட் ஸ்கொயர் போனோம். அங்கு ஒரு சின்ன பார்க். அங்கு நிறைய அரசியல் தலைவர்கள் சிலைகள் வைத்திருந்தார்கள். அங்கு மண்டேலா சிலைக்குப் பின்னால் உட்கார்ந்துதான் எங்கள் கட்டுச்சோற்றை அவிழ்த்தோம். அதில் இருந்தது புளி சாதம் பிளஸ் முட்டை. அநேகமாய்; லண்டன் போய் அந்த இடத்தில் புளிசாதமும் முட்டையும் சாப்பிட்டது உலகத்திலேயே நாங்களாகத்தான் இருக்கும். 

இந்திய பேரீச்சை என்றால் புளி

பெர்சியன்கள் மற்றும் அரேபியர்கள் இன்றும் கூட புளியை டம்மார் ஹிண்ட் (DUMMAR HIND) என்கிறார்கள்.. ஆதற்கு அர்த்தம் இந்திய பேரீச்சை (INDIAN DATE) தமிழ்நாட்டில் நமக்குத் தெரிந்து சாலை ஓரங்களில் அதிகம் இருந்தது புளிய மரம்தான்.

இன்றும் கூட சாலை மரங்களாக அதிகம் இருப்பவை புளிய மரங்கள்தான். அதேபோல ஒருவழிச் சாலைகளை இருவழி, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளை அகலப்படுத்தும்போது அதிகம் பலியாவது பாவம், புளிய மரங்கள்தான். எல்லாம் ஜமீன்தார்கள் வச்ச மரங்கள். சாலையிலே புளிய மரம் ஜமீன்தாரு வச்ச மரம்

உலகிலேயே முதல் புளி ரகம்

அகில உலக அளவில் முதன்முதலாக, புளியில் உயர்விளைச்சல் ரகத்தைக் கண்டுபிடித்தது பெரியகுளம் ஆராய்ச்சி நிலையம்தான் என்று சொல்லுகிறார்கள்.

அந்த ரகத்தின் பெயர் பி கே எம் 1 (P K M.1) இது எண்டப்புளி என்ற உள்ளுர் ரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. உள்ளுர் ரகத்தில்  புளியின் தசை 28 சதம் என்றால் பி கே எம் 1 ரகத்தில் 39 சதம் உள்ளது.

உரிகம், தும்கூர், ஹாசனூர், பிரத்திஸ்தான், லோகேஸ்வரி ஆகிய உள்ளுர் ரகங்கள் மிகவும் பிரபலமானவை.

உணவே மருந்து என்பது தமிழ் கலாச்சாரம்

உணவே மருந்து என்பது தமிழ் கலாச்சாரம். அந்த வகையில் புளி எப்படி மருந்தாகிறது, பாருங்கள்.

சீரண மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ளுகிறது; உடல் எடையை சீராக பராமரிக்கிறது. சக்கரை நோயை கட்டுக்குள் மடக்கிப் பிடிக்கிறது. வயிற்றுவலி, ஸ்கர்வி, ஜலதோஷம், மூக்கடைப்பு, காய்ச்சல், சீதபேதி, மூட்டுவீக்கம், தொண்டைப்புண், தைராய்ட் பிரச்சினை, போன்றவற்றை குணப்படுத்துகிறது.

புளியில் இருக்கும் பொட்டாசியம் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பினைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  இரும்புச்சத்து ரத்தச்சோகை போக்க உதவுகிறது. வைட்டமின்  சத்து கண்பார்வை சம்மந்தமான பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது.

புளியின் பலமொழிப் பெயர்கள்

தமிழ் : புளி(PULI)

இந்தி: இம்ளி (IMLI)

பெங்காலி: அம்ளி (AMLI)

மணிப்புரி: மாங்கி (MANGE)

தெலுங்கு: சின்ட்டா (CHINTA)

மராத்தி: சின்ச் (CINCH)

மரத்தின் பயன்கள் :

மரம் 40 முதல் 60 அடி உயரம் வளரும்;

தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும், கால்நடைகளுக்கு தீவனமாகும். பிஞ்சுகள், காய்கள் கிராமப்புற பள்ளிக் குழந்தைகளின் மலிவான தின்பண்டமாகும். தேனீக்களுக்கு உதவும் வகையில் மே முதல் ஆகஸ்ட் வரை மரம் முழுக்க பூக்கும். லேசான நறுமணம் வீசும். மற்ற பூக்களில் சேகரிக்கும் தேனைவிட புளியம்பூ தேன் காஸ்ட்லி.விலை அதிகம்.

உரல், உலக்கை, மரச் செக்குகள் செய்யும் மரம்

மேஜை நாற்காலி, தூண்கள், உத்திரங்கள், உரல், உலக்கை, மரச் செக்குகள், கம்பங்கள், முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், காகிதம் தயாரிக்க மரக்கூழ், அடுப்பெரிக்க இலைகள், கிளைகள், மற்றும் மரம், சாலையேரத்தில் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்ட என்று புளியன் மரம் பல வகைகளில் உதவும். உறுதிக்கு பெயர்போனது. கரையான்கள் வாய் வைக்காதது. இதில் செய்த மரச் சாமான்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்.

எல்லா வகை மண்ணிலும் வளரும்.

சீர்கேடடைந்த மண்வகை, களிமண், மணல்சாரி, சரளை மண், களர் மற்றும் உவர் மண், இருமண்பாடான செம்மண், ஆழமான மண்கண்டம்கொண்ட  வடிகால் வசதி உள்ள மண் இப்படி எல்லா வகை மண்ணிலும் வளரும். கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

புளியம்பழம் அறுவடை தொடர்பாக ஒரு சுலபமான சூத்திரம் சொல்லுகிறேன். ஒரு நூறு கிலோ அறுவடை செய்கிறீர்கள். அதில் புளி எத்தனை கிலோ இருக்கும் ? எவ்வளவு கொட்டை இருக்கும் ? எத்தனை கிலோ ஓடு இருக்கும் ? அதில் தசை 30 % இருக்கும். ஓடு 30 %  இருக்கும். கொட்டை 40%  இருக்கும்.

புளிய மரம் ஒரு புனிதமான மரம்

மடகாஸ்கர் மக்களுக்கு புளிய மரம் ஒரு புனிதமான மரம். அங்கு புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்கினால் அதன் அடையாளமாக ஒரு புளியன் மரம் நடுவார்கள். தங்கள் மூதாதையர்களின் ஆவிகள் தங்கும் இடமாக நம்புகிறார்கள். அது புளிய மரம் இல்லை புனித மரம் என்கிறார்கள்.

இந்துக் கோவில்கள், புத்த மத ஆலயங்கள், போன்றவற்றில் உள்ள பித்தளை, தாமிர வெண்கலச் சிலைகள் மற்றும் விளக்குகளை பளிச்சென்று துலக்க புளி தான் பெஸ்ட்துலக்கி

புளிச்சக்கையும் கிளீனிங் பவுடரும்.

பாத்திரம் துலக்க புளிச்சக்கையை அடித்துக்கொள்ள இதுவரை எந்த கிளீனிங் பவுடரும் லோகத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை என்கிறார்கள் தமிழ்நாட்டுத் தாய்மார்கள்.

புளி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் அதில் யாரும் ஓயின் தயாரிப்பதில்லை. ஜூஸ் தயாரிப்பதில்லை. பிரேசில் நாட்டில் புளி ஜூஸ் இல்லாத ஜூஸ் கடைகள் கிடையாது.

முந்திரி, அன்னாசிப்பழம், சீத்தாப் பழம் ஆகியவற்றில் பல நாடுகள் புதுவகை மதுவகை எல்லாம் தயார் செய்கிறார்கள். நாம் ஒழுங்காய் பழங்களைக் கூட சாப்பிடுவது கிடையாது. வாழைப்பழத்தைக் கூட வத்தி ஸ்டேண்டாக பயன்படுத்துவதோடு சரி.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...