Monday, June 12, 2023

A MIRAGE OF LOVE வளையல் கைஒன்று வாஎன்றது

வளையல் கைஒன்று வாஎன்றது


(மண்ணில் கால் பாவாமல் கனவுகளை கண்ணில் தேக்கியபடி அலையும் கல்லூரி காலத்து கதை. கோவை வேளாண்மைக் கல்லூரியில் படித்த விவசாய பட்டதாரிகள் மனதில் இந்த கதைக்களம் பழைய நினைவுகளை கிளறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. வாழ்க பொட்டானிகல் கார்டன்ஸ்)

03. வளையல் கைஒன்று வாஎன்றது

தூக்கம் வருவேனா பார் என்றது. இரவு இரண்டுமணி. நடராஜன் கட்டிலில் புரண்டான்.

      உபரியான டிசம்பர் குளிர். உயரத்தில் அனாசின் மாத்திரை மாதிரி நிலா. டியில் விவசாயக் கல்லூரி ஹாஸ்டல்.

      விவசாய பட்டப் படிப்பு படிக்கும் ஒரு மாண்புமிகு மாணவனுக்கு இரவு இரண்டு மணிவரை தூக்கம்வராத சோகம் என்னவாக இருக்கும்…? 

      ஒரு பையன் முந்தாநாள்தான் காலேஜில் சேர்ந்தான். நேற்றுப் பார்த்தால் ஆர்.எஸ். புரத்தில் எவளோ ஒருத்தியுடன் அலைகிறான்.

      நடராஜன் இன்று காலை அவனை ரேக்கிங் செய்யும்போது முட்டிப் போட வைத்தான்.

      இவன் ரூம் மேட் கணேசன். பக்கத்து கட்டிலில் ரைஸ் மில் ஓட்டிக் கொண்டிருந்தான். ( ! ! ) குறட்டை.

      அவனுக்கு ஆரேழு பெண்கள் ( கூடுதலாகவும் இருக்கலாம் ) ஊரிலிருந்து லவ் லெட்டர் எழுதுகிறார்கள்.

      பொழுது விடிந்து பொழுதுபோனால் இதற்கு பதில் எழுதவே நேரம் சரியாக இருந்தது அவனுக்கு.

      அடுத்த அறை பாண்டியன் கூட நடராஜன் மாதிரி  தேமேன்னுதான் இருந்தான்.

      திடீரென்று ஒரு நாள் கணேசனிடம் வந்து வழிகிறான். என்னடா என்றால் லவ்வாம். ” 

      இப்படி நடராஜனை மட்டும் ஒதுக்கிவிட்டு முழு காலேஜே காதல் வயப்பட்டிருந்தது.

      இவனுக்கு எப்படி தூக்கம் வரும்…?

      இவனும் கோவையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் அலைகிறான்

      ஒரு கழுதையாவது திரும்பிப் பார்க்கணுமே…?

      இவன் என்ன புலியா சிங்கமா…?

      கடித்தா தின்றுவிடப் போகிறான்…?

      இப்படியாக உடலும் உள்ளமும் நைந்து நடராஜன் அன்று உறங்கிப் போனான்.

      அடுத்தநாள். ஞாயிறு. விடுமுறை. காலை பத்துமணி காலேஜ் பொட்டானிகல் கார்டன்;.

      மாணவர்கள் தோட்டத்தில் அங்குமிங்குமாய் சிதறி படித்துக் கொண்டிருந்தார்கள்.

      ஒரு பக்கம் -- நடராஜன் -- பாட்டனி புத்தகம் ஏந்திய கையுடன் நடந்துக் கொண்டிருந்தான்.

      அந்த நடை பாதையில் சற்றுத் தொலைவில் விஜயா. தோட்டத்தில் தினக்கூலி.  காய்ந்த இலைச் சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்தாள்.

      பெருக்கும் துடப்பத்தை கையிலிருந்துப் பிடுங்கிக் கொண்டு கோவிலில் நிறுத்தினால் அம்மன்தான். சாஸ்டாங்கமாய் விழுந்து கும்பிடலாம்.

      இன்று நடராஜனுக்கு நல்ல மூடு. அவள் அருகாமையில் போனான்.

      இவ்வளவு அழகாய் இருந்துக் கொண்டு ஒருத்தனையும் திரும்பிப் பார்க்காமல் இவளால் எப்படித்தான் இருக்க முடிகிறதோ…? 

கடலில் பேயும் மழை …  காட்டில் காயும் நிலா

      மூச்சுவிட்டாலும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அருகாமையில் போனான்.

    “க்ஹும் “  கொஞ்சம் பலமாக கனைத்துவிட்டான்.

      தூரத்தில் பெருக்கிக் கொண்டிந்த கிழவிகூட  திரும்பி இவனை ஒரு மாதிரியாய்  பார்த்தாள்.

      விஜயா இவனை முறைத்துப் பார்த்தாள். துடப்பத்தின் அடிப்பகுதியை இன்னொரு கையில் குத்தி சரி பார்த்தாள்.

      மீண்டும் மும்முரமாய் பெருக்கினாள். 

      நடராஜன் மீண்டும் க்ஹும் “  சற்று அளவு குறைந்த கனைப்பு.

      விஜயா பெருக்குவதை நிறுத்தி திரும்பி அவனைப் பார்க்க அவன் அவளைப் பார்க்க மின்னல்.

      அவள் துடப்பத்தை கீழே போட்டாள். எழுந்து நின்றாள். அம்மன் அம்மன் காலை லேசாக உயர்த்தினாள். காலில் பேட்டா செறுப்பு.  நீடித்த உழைப்பு. நிறைய தேய்மானம் கண்டிருந்தது. கழற்றினாள்.  அடிப்பகுதியை உயர்த்தி எதையோ தேடினாள்.

    “தி டிப்ரன்ஸ் பிட்வீன் மானோகாட்டிலீடன்ஸ்அண்ட் டைகாட்டிலீடன்ஸ்" சப்தமாக படித்தபடி வேகமாக நடந்தான் நடராஜன்.

    “ஓலகத்துலேயே இல்லாத அழகி. அலட்டிக்கறா.சீ சீ இந்தப்பழம் புளிக்கும்.

       நடராஜன் துப்புரவாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.   ஒரு சின்ன சந்தன மரம். நான்கைந்து கிளையுடன் பட்டன் பார்ம் பனைமரம். பொன் மூங்கில் புதர். அத்தனையும் தாண்டி நடந்து விஜயாவை மறந்தான்.

      மீண்டும் ஒரு மின்னல்.

      யாரோ தூரத்திலிருந்து ஒரு வளையல் கை. இவனை அருகில் வருமாரு சைகை காட்டி ஒல்லியாய்  தாவணி கட்டிய ஒரு கை அசைந்தது. வேறு யாரையும் அல்ல. இவனைத் தான். மறுபடியும் - அதே வளையல் அதே கைசைகை. நடராஜன் மனசு படபட.

      இவனுக்கு கைகளுக்கு பதிலாய் பூ-பூவாய் இறக்கைகள் முளைக்க தும்பி மாதிரி வானத்தில் எம்பி நடராஜன் வேகமாய் நடக்க பாதை அனாவசியமாய் வளைந்து வளர்ந்தது. எரிச்சல் அவசரம்.  வேகம்.;  இரண்டே எட்டுதான். கைக்கு எட்டும் தூரத்தில் அந்த கன்னி.

      அவள் ஒரு ரயில் கற்றாழை மடலை பிடித்தபடி. திரும்பி நின்று வெட்கப்பட்டாள்.  கூர்ந்து கவனித்தான்.

      மங்கை அல்ல.  மரியாதையான நங்கை. திருநங்கை.

      இவன் குனிந்து செருப்பைக் கழட்டினான். விஜயா ஞாபகத்தில் வர அதைப் போட்டுக் கொண்டு திரும்பினான்.

      பூந்தோட்டத்தில் குழந்தைகள் விளையாடும் வட்ட வடிவ மண்டபம் காலியாய் இருந்தது.

    “ தி டிப்ரன்ஸ் பிட்வீன் மானோகாட்டிலிடென்ஸ் அண்ட் டை-காட்டிலீடென்ஸ் மண்டபத்தில் நடந்தபடி உண்மையிலேயே படித்தான் நடராஜன்.

      ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும்.

    “ பளார் வேகமாய் ஒரு அறை. இவன் கன்னத்தில்தான்.

      சின்ன வயசாய் இரண்டு வில்லன்கள். இவனை மாறி மாறி அடித்தான்கள்.

      ஒரு வளையல்கைவாஎன்றது…’ கவிதையிலயா லவ் லெட்டர் குடுக்கறேபொட்டானிகல் கார்டன்ல படிக்க வந்தா ஒழுங்கா படிச்சிட்டுப் போகணும்

      சினிமா மாதிரி அடித்தான்கள் பாவிகள்.

      இவன் எங்கே கவிதை எழுதினான்…? எவனோ எழுதிய கவிதைக்கு இவன் வாங்கி கட்டிக்கெண்டான்.

      ஓம்மூஞ்சிக்கி லவ் லெட்டர் ஒரு கேடா…?  சோம்பேறி ! எப்படி அது ஒரு வளையல்கைவா என்றது ! கவிதை ?’

   “  நான் எழுதலடாபாவிங்களா…” என்று சொல்ல அவகாசம் இல்லாமல் அடித்தான்கள்.

      நல்லவேளை அடித்ததை எவனும் பார்க்கவில்லை. இவன் சுதாரித்து எழுந்தபோது அவர்கள் போய்விட்டிருந்தார்கள்.

      இவன் வேகமாய் அறைக்குத் திரும்பிய போது ரூம்மேட் கணேசன் இவனிடம் சொன்னான். ' ஒரு வழியா அந்த பொண்ணுகிட்ட லெட்டரை குடுத்திட்டேன். பதில் கேக்கறதுக்கு முன்னாடி அவளுக்கு தெரிஞ்சு நாலஞ்சி பையனுங்க வந்துட்டானுங்க. நைசா அங்கருந்து நழுவிட்டேன்.

இந்த கவிதையதான் அவளுக்கு எழுதி கொடுத்தேன். வழக்கம்போல  அவன் எழுதிய லவ் லெட்டரை நடராஜனிடம் படித்துக் காட்டினான்" நல்லா இருக்கா பாரு.

      ஒரு வளையல்கைவா என்றது’  என்று கவிதையை கேட்டதுதான் பாக்கி.  பளார் பளார்" என்று ஓங்கி அறைந்தான் தன்னால் முடிந்தவரை அவன் கன்னத்தில் நடராஜன்.

      கணேசன் காதுக்குள்  ஙொய்ங்…” 

    “ஒம் மூஞ்சிக்கு கவிதையில லவ் லெட்டரு…?  சோம்பேறி ..

88888888888888

 

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...