Sunday, May 7, 2023

MAGNIFICENT FLOWERS OF MAGIZHAM TREE - ரம்யமான வாசம் தரும் பூமரம் மகிழம்

மகிழம் - BULLET WOOD TREE
MIMUSOPS ELENGI


 
இவை எல்லாம் இல்லாத நாசியை உறுத்தாத ரம்யாமான வாசனை கொண்டது மகிழம்பூ. இதன் பூக்கள், வெளிர் மஞ்சள் நிறமானது  வெகுநேரம் வரை பூக்கள்  புத்தம்புதுசாய் இருக்கும். பூக்கள் வாடி வதங்கிய பின்னாலும் பல நாட்கள்வரை வாசம் வீசிக்கொண்டே இருக்கும். எவ்வளவு பூத்தாலும் சில மரங்களின் பூக்கள்தான் மரத்தடியில் பாய்விரித்தது போல கொட்டிக் கிடக்கும்.  அப்படி பூக்களால்; பாய்விரிக்கும்  மரமல்லி, பவளமல்லி என்ற வரிசையில் மகிழம்பூ மரமும் சேரும்.

07. மகிழமரம்

(BULLET WOOD TREE)

தாவரவியல் பெயர்: மைமுசாப்ஸ் எலங்கி (MIMUSOPS ELENGI)

தாவரக்குடும்பம் பெயர்: சப்போட்டேசி   (SAPOTACEAE)

888888888888888888888888888888888888888888888

மகிழமரம், இந்தியா, இலங்கை, அந்தமான் தீவுகள், மியான்மர், இந்தோசைனா, ஆப்ரிக்காவில், கானா, தான்சானியா, மொசாம்பிக், மொரிஷியஸ் ஆகியவற்றை சொந்த பூமியாகக் கொண்டது.

வாசமிக்க பூக்கள்

மகிழமரம் தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா ஆகியவற்றில் அதிகம் பரவியுள்ள மரம்.  தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள யாலா  என்னும் மாநிலத்தின் அரசு மரம்.

மகிழமரம், சிறிய அளவு சிக்கனமாக வளரும் இந்திய மரம். அதிக பட்சமாக 16 மீட்டர் உயரம் வரை வளரும்.  தோட்டத்திற்கு மரியாதையும் மதிப்பும் சேர்க்கும் மரம்.  மரம் இருக்கும்  தோட்டம் மார்ச்  முதல் ஜூலை வரை ஐந்து மாதங்கள் முழுக்க பூக்களின் வாசம் நிரம்பி வழியும். 

இந்தியா முழுக்க கோவில்களில் மகிழம்பூ மரங்களைப் பார்க்கலாம். கோவில் பூஜைகளில் வைக்கப்படும் முக்கிய பூக்களில் மகிழம் பூவும் ஒன்று..

மகிழம் இலைகள், பளிச்சென்று இருக்கும். பளபளப்பாக இருக்கும். அடர்த்தியான பச்சை நிறத்தில் அழகாய் இருக்கும்.  மாலை நேரத்தில் மரத்தடியில் பாய்போட்டது போல, பூக்கள் கொட்டிக் கிடக்கும்.  பூக்கள் உதிர்ந்த பின்னால் பல நாட்கள் வரை வாசம்மட்டும் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும்.

சில பூக்கள் தொட்டவுடன் வாடிப்போகும்.  பறித்த சில மணித்துளிகள் மட்டுமே அதன் புதுத்தன்மை இருக்கும்.  சில பூக்களின் வாசனை நன்றாக இருக்கும்.  ஆனால் கொஞ்ச நேரத்தில் தலைவலி வந்துவிடும். அந்த வாசனை இனிமையாக இருந்தாலும் நெடுநேரம் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. 

இவை எல்லாம் இல்லாத நாசியை உறுத்தாத ரம்யாமான வாசனை கொண்டது மகிழம்பூ. இதன் பூக்கள், வெளிர் மஞ்சள் நிறமானது  வெகுநேரம் வரை பூக்கள்  புத்தம்புதுசாய் இருக்கும். பூக்கள் வாடி வதங்கிய பின்னாலும் பல நாட்கள்வரை வாசம் வீசிக்கொண்டே இருக்கும்.

எவ்வளவு பூத்தாலும் சில மரங்களின் பூக்கள்தான் மரத்தடியில் பாய்விரித்தது போல கொட்டிக் கிடக்கும்.  அப்படி பூக்களால்; பாய்விரிக்கும்  மரமல்லி, பவளமல்லி என்ற வரிசையில் மகிழம்பூ மரமும் சேரும்.

1. மகிழ மரத்தின் பல மொழிப் பெயர்கள்:

1.1. தமிழ்: மகிழம் பூ (MAGIZHAMPOO)

1.2. இந்தி: மால்சாரி (MALSARI)

1.3. உருது: கிராகுலி (KIRAGULI)

1.4 மணிப்புரி: போக்குல் லே (BOKUL LE)

1.5. மலையாளம்: இலன்னி (ILANNI)

1.6. பெங்காலி: பக்குல் (BAKUL)

1.7. மராத்தி: பக்குலி (BAKULI)

1.8. கொங்கணி: ஒம்வால் (OMWAL)

1.9. கன்னடா: ராஞ்சல் (RONJAL)

1.10. குஐராத்தி: பர்சோலி (BARSOLI)

1.11. நேபாளம்: மவுலாசாரி (MAVULASARI)

1.12. லங்காசானி: வக்குல் புவுபா (VAKUL PUVUPA)

1.13. பொதுப் பெயர்கள்: புல்லட் வுட் ட்ரீ, ஸ்பேனிஷ் செர்ரி (BULLET WOOD TREE, SPANISH CHERRY)

மகிழம் ஒரு மூலிகை

இந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள், பட்டைகள் வேர் அனைத்தும் மருந்துகள் செய்யப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மகிழம் ஒரு மகத்தான  மூலிகை.  வாய் துர்நாற்றம், பல் ஆட்டம், பல்வலி எல்லாவற்றையும் குணப்படுத்;தும். பல் ஈறுகளை பாதுகாப்பபிலும், உறுதிப் படுத்துவதிலும் இது ஒரு சஞ்சீவி மூலிகை.

பாடாய்படுத்தும் பல்வலி

இந்தக் கட்டுரை எழுதும்போது எனக்கு கடுமையான பல்வலி. இரண்டு மூன்று நாட்களுக்கு பாடாய்படுத்திவிட்டது. சோதனை செய்து பார்ப்போமே என்று பத்து மகிழம் இலைகளில் கஷாயம் தயார் செய்து இரண்டு நாள் வாய் கொப்பளித்தேன். பல்வலி காணாமல் போச்சி. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பல்ஈறுகள் வீக்கம், பல்வீச்சம், வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்த மகிழம் மரப்பட்டைக் கஷாயத்தின் மூலம் வாய் கொப்பளிக்க வேண்டும். மகிழ மரத்தின் தளிர் இலைகள் மற்றும் இளம் காய்களை மெல்லுவதன்    மூலம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவினை சரிசெய்யலாம்.

இதன்பட்டை அல்லது மரச்சில்லுகளில் கஷாயம் தயார் செய்யலாம்.  இதனை 40 முதல் 50 மில்லி தருவதன் மூலம் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தலாம்:  வயிற்றில் உள்ள குடற்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளைப்படுதல்

சூததவலி, பெண் உறுப்பில் ஏற்படும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்துவதில் சிறப்பானது, மகிழம்பூ பட்டைக் கஷாயம்.  உடற்காய்ச்சல், மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் பட்டைக் கவுhயத்தை 30 முதல் 40 மில்லி குடிக்கலாம்.

வண்டுக்கடி மற்றும் சிறு பிராணிகள் கடித்தலால் ஏற்படும் விஷத்தை முறிக்கவும், காயத்தைக் குணப்படுத்தவும், இதன் பட்டை மற்றும் மகிழம் காய்களை, அரைத்து கூழாக்கி காயங்களில் பூச வேண்டும்.

இதன் பூக்களை நீரில் ஊறவைத்து வடிக்கும் பூவடிநீரை 40 முதல் 50 மில்லி குடித்து வந்தால், பலவீனமான இதயத்தினை பலமுள்ளதாக மாற்றிவிடும். அதாவது இதயத்தின் தசைகளை வலுவுடையதாக நாளடைவில் மாற்றிவிடும்.

பூக்களிலிருந்து தயாரிக்கும், கஷாயத்தினை உடலை வலுவாக்கும் பொதுவான டானிக்காகவும் பயன்படுத்தலாம்.

முரட்டு மரம்

வசதி வாய்ப்புள்ள மனிதர்களை சுகபோகமான ஆசாமிகள் என்பார்கள்.  ஆங்கிலத்தில் அவர்களை லக்ஸரியஸ் பீப்பிள்என்பார்கள்.  அது போல இதனை லக்சரியஸ் வுட்(LUXURIOUS WOOD) என்று நாமகரணம் சூட்டி உள்ளனர்.  மிகவும் கடினமான மரம். வலுவான மரம்.  முரட்டு மரம்.  செவ்வரி ஓடிய வயிரம்; உள்ள மரம்.  அதுவும் அடர்த்தியான சிவப்பு நிறம்.

சில மரங்களில் பாலீஷ் ஏற்ற முடியாது.  சில மரங்களில் சுமாராக பாலீவு; ஏற்றலாம்.  ஆனால் மகிழமரம், அப்படி அல்ல.  எந்த அளவுக்கு பாலீஷ் ஏற்றுகிறீர்களோஅந்த அளவுக்கு அதன் மெருகு கூடும்.

மகிழ மரத்தின் பட்டை, பூக்கள், பழங்கள், விதைகள் அத்தனையும் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

இதன் மரம் ஆச்சரியப்படும் வகையில் பலவிதமாகப் பயன்படுகிறது.  அவை, கட்டிடங்கள் பாலங்கள், கப்பல் மற்றும் படகுகள், மற்றும் கடலோரக் கட்டுமானங்கள், தரை மேவுதல், கதவுகள், சட்டங்கள், கம்பங்கள், உத்தரங்கள், ரயில்தடத்தின் அடிக்கட்டைகள், சுரங்க முட்டுக் கம்பங்கள், மேஜை நாற்காலிகள், பெட்டிகள் வாகனங்களின் கட்டுமானம், சக்கரங்கள், கடைசல் சாமான்கள், கருவிகளின் கைப்பிடிகள், விளாயாட்டுச் சாமான்கள், இசைக் கருவிகள் என நூற்றுக் கணக்கானவற்றை பட்டியிலிடலாம்.

பூங்காக்களில் நடலாம்

விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெய் சமைக்கவும் விளக்கு எரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.  பழங்களை சாப்பிடலாம் ஆனால் எவ்வித சுவையும் இருக்காது.  சிலர் பேரீச்சைபோல இருக்கும் என்கிறார்கள்.  பட்டையில் டேனின் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.  ஆனால் இந்தியாவில் தோல் பதனிட உபயோகம் ஆகிறது. சாலை ஒரங்கள், கடற்கரை, வீட்டுத் தோட்டங்கள், கோவில் தோட்டங்கள், பூங்காக்கள், இப்படி பல இடங்களிலும் வளர்க்க ஏற்றது மகிழ மரம்.

வகுளம் எனும் சங்க இலக்கிய மரம்

விதைகளை விதைத்து அல்லது கிளைகளை நட்டு புதிய மரங்களை உருவாக்கலாம்.  விதைகளின் முளைப்புத் தன்மை 9 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும்.  17 முதல் 82 நாட்களில் நூற்றுக்கு 70 முதல் 90  விதைகள் முளைக்கும்.  ஒரு கிலோ எடையில் 2000 விதைகள் வரை இருக்கும். 10 முதல் 15 செ.மீ நீளமுள்ள, 0.5 முதல் 1.00 செ.மீ தடிமனான குச்சிகளை வெட்டி நடவு செய்யலாம்.

சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் மற்றும் சங்க இலக்கிய நூல்களில், ‘மகிழம்பூபற்றிய குறிப்புகள் உள்ளன.  ஆனால் அந்த காலகட்டத்தில் இதன் பெயர் வகுளம்’. இப்போது வகுளம்  என்ற பெயர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மகிழம்பூ பிளாஸ்டிக்கில் வந்திருக்க  வாய்ப்பு உண்டு.

Please Post your Comments, regards – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

8888888888888888888888888888888888888888

    

                    

 

 

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...