Saturday, July 31, 2021

சிங்கப்பூர்செர்ரி எனும் கசகசா பழ மரம் - SINGAPORE CHERRY FRUIT TREE

  



சிங்கப்பூர்செர்ரி எனும் கசகசா பழ மரம்  

SINGAPORE CHERRY FRUIT TREE



நினைத்தாலே இனிக்கும் என்பது மாதிரி பார்த்தாலே பரவசப்படுத்தும் மரம்.

நான் காலையில் எழுந்தவுடன் வெளியில் வந்தால் கண்ணில்படும் முதல் மரம்.

இந்த மரத்தின் அடியில் நண்பர்களுடன் உட்கார்ந்து தேனீர் குடிக்கப் பிடிக்கும். அமுதக்கரைசல் தயாரிக்க, பஞ்சகவ்யம் தயாரிக்க, செயல்விளக்கம் கொடுக்க எனக்குப் பிடித்தமான இடம் இந்த மரத்தடிதான்.


குருவிகள் வந்து போகும் மரம்

கொஞ்சம் அணில்கள், தேன்சிட்டுக்கள், வண்ணாத்தி குருவிகள் எப்போதும் இந்த மரத்தில் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும்;. மாங்குயில்கள், கருவாட்டுவாலி, டேகை, கிளி போன்ற உயர் ஜாதிக் குருவிகள் எப்போதாவது ஒரு முறை வந்துபோவதுண்டு. 

வண்ணாத்திக் குருவிகள் அதன் சின்ன வாயில் முழுசாய் பழங்களை சிரமப்பட்டு விழுங்கும் காட்சி ஆச்சரியமாய் இருக்கும். பகல் பன்னிரண்டு மணி நேரமும் ஆண்பெண் அணில்கள் ஓடிப்பிடித்து ஓரியாடுவது மட்டும் டிவி சீரியல் மாதிரி தொடரும்.;

மரத்தின் அடியில் உட்கார்ந்து அண்ணாந்துப் பார்த்தால் சிறுசிறு கிளைகளால்  பின்னிய மரக்குடை போல தோன்றும்;. நிழல்தர அருமையான மரம். 

நான் எனது பயிற்சி வகுப்புகளைக்கூட இந்த மரத்தடியில் நடத்துவதுண்டு. ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு. பயிற்சிக்கு வருபவர்கள் நான் சொல்லுவதைவிட இந்த மரத்தை வேடிக்கை பார்ப்பதுதான் அதிகம் இருக்கும்.

 

கோலிக்குண்டுகள் மாதிரியான பழங்கள்

எனக்குத் தெரிந்து நர்சரிக்காரர்கள்தான் இதனை முதன் முதலில் பயன்படுத்தினார்கள். வரிசையாக இந்த மரங்களை நட்டுவிட்டு பாக்கெட் செடிகளை அடுக்கிவிடுகிறார்கள். எனக்கு செடிகளை விற்கும் நர்சரிகளில்தான் இந்த மரம் அறிமுகம் ஆனது. 

இதன் இலைகளை தொட்டுப் பாருங்கள். வெல்வெட் துணி மாதிரி இருக்கும். இலைகளில் மெல்லிய ரோமம் போர்த்தியபடி இருக்கும். 

பழங்கள் சின்ன சைஸ் சிவப்பு கோலிக் குண்டுகள் மாதிரி இருக்கும். எங்கள் தோட்டத்து வேலியில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் காலையில் தேனீக்கள் அதிகம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதற்கு அடுத்தபடி மொய்த்துக் கொண்டிருப்பது பள்ளிக் குழந்தைகள்.

 

பாரம்பரிய மருத்துவ மரம்

இநதப் பழங்களை நெய்ப்பழம் என்கிறார்கள். சாப்பிட்டுப் பார்த்தால் பழத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு சுவை. பழங்களில் ஜாம் தயாரிக்கிறார்கள். இலைகளில் தேநீர் தயாரிக்கிர்கள்.

இதன் இலை, பூ, பழம், பட்டை, மரம், வேர் என்று எல்லா பகுதிகளிலும் வழிவழியாய் மருந்து தயார் செய்து சாப்பிடுகிறார்கள். 

தலைவலி, குடற்புண், கைகால் வீக்கம் சுவாசம் சம்மந்தமான உபாதைகள், வயிற்றுப்போக்குஆண்களின் புராஸ்ட்ரேட் சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு மற்றும் வலிப்பு எல்லாவற்றிற்கும் மருந்து தருகிறது.

பழங்களை சாப்பிடுவதால்  ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். புற்றுநோய் வராமல் தடுக்கும். இந்தப் பழங்களில் வைட்டமின் சிஅதிகம் இருக்கிறது.

தசை, எலும்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு உடலுக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.;

இதன் இலைகளில் தேநீர் தயாரித்து குடிப்பதாலும் இந்த பலன் கிடைக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. இது ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. ஏஞ்சியோகிராம் ஏஞ்சியோபிளாஷ்ட், ஸ்டெண்ட், எதுவும் வேண்டாம். 

ஆற்றங்கரைகளில் இந்த மரங்களை நடுகிறோம். இந்த மரங்கள் உதிர்க்கும் பழங்கள் மீன்களுக்கு உணவாகின்றன.  அந்த பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிக்கிறது..என்கிறார்கள் பிரேசில் நாட்டு மீனவர்கள். 

மரச்சாமான்கள் செய்ய, இதர மரவேலைகள் செய்ய, எரிபொருளாக, கயிறு திரிக்க, நிழல் மரமாக, அழகு மரமாக, பல்லுயிர் பெருக்கும் பயனுள்ள சகலகலா மரவகை.

நியோ டிராபிக்ஸ், மெக்சிகோ, மற்றும் பொலிவியா ஆகிய மண்ணுக்கு சொந்தமானது இந்த சிங்கப்பூர்செர்ரி மரம். ஆயினும் இது பரவியுள்ள நாடுகள் இந்தியா, கரிபியன், இந்தோனேசியா, தென்அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சைனா, கியுபா, ஹெயிட்டி மற்றும் டொமினிக் ரிபப்ளிக்.

 

கிளைகளை வெட்டி நடலாம்

இந்த மரத்தின் கன்றுகளை உற்பத்தி செய்வதும், நட்டு வளர்ப்பதும் சுலபம். கிளைகளை வெட்டி நடலாம். கன்றுகளை வளர்த்து நடலாம். விதைகளை சுலமாய் முளைக்க வைக்கலாம். விதைகளை ஈரமான காகிதம் அல்லது துணியின் மீது வைத்து வெண்மையான வெளிச்சத்தில் வைத்தால் நன்கு முளைக்கும். சராசரியாக 100க்கு 40 விதைகள் முளைக்கும்.

முதிர்கன்னிகள் மற்றும் முதிர் இளைஞர்களுக்கு ஒரு டிப்ஸ் ! ஒரு வேளைக்கு 9 முதல் 12 பழங்கள் சாப்பிடுங்கள். கவுட் தொடர்பான வலிகள் காணாமல் போகும். கவுட் என்றால் கீல்வாதம். முக்கியமாக மூட்டுப்பிடிப்பு மற்றும் மூட்டுவலியை உள்ளடக்கியதுதான்  கீல்வாதம்.

இதுநாள்வரை இந்த மரத்தடியில் காலையில் காப்பியும் மாலையில் தேநீரும் குடிப்பேன். ஆனால் இலைகளிலேயே தேநீர் தயாரிக்கலாம் என்பது தெரியாமல் போயிற்று. சிங்கப்பூர்செர்ரி. இலைத் தேநீர் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

சக்கரை அளவைக் குறைக்கும். நான் 10 வருஷமாய் டயபெடிக், இரண்டு மாதமாய் ஹார்ட் பேஷண்ட். இனி டெய்லிடெய்லி சிங்கப்பூர்செர்ரி தேநீர்தான்.

 

மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: சிங்கப்பூர் செர்ரி, கசகசா பழ மரம், சக்கரைப்பழ மரம் (SINGAPORE CHERRY, GASAKASA PAZHA MARAM, SAKKARAI PAZHA MARAM)

கன்னடா: கசகசா ஹன்னினா மரா (GASA GASA HANNINA MARA)

தாவரவியல் பெயர்: மியூட்டிஞ்சியா கலாபுரா (MUTINGIA  CALABURA)

தாவரக்குடும்பம்: மியூட்டிஞ்சியேசி (MUTINGIACEAE)

பொதுப்பெயர்கள்: சிங்கப்பூர் செர்ரி, ஜமைகா செர்ரி, காட்டன் கேண்டி பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ட்ரீ (SNGAPORE CHERRY, JAMAICA CHERRY, COTTON CANDY CHERRY,STRAWBERRY TREE )

ஏறத்தாழ 60 வகையான பறவைகள், பிராணிகளுக்கு உறைய இடமும் உண்ண பழமும், அருந்த தேனும் தந்து விருந்து வைக்கும் மரம் என்கிறார்கள் வன விலங்கு நிபுணர்கள். இது ஒரு பயோடைவர்சிட்டி (BIO DIVERSITY TREE) மரம். 


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...