Thursday, July 2, 2020

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அரேபியாவிலும் ஆப்ரிக்காவிலும் உகாய்தான் உறுதி ! UKAI TOOTH BRUSH TREE MESHWAK


THADANENDAL NONDIKARUPPAN TEMPLE


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
அரேபியாவிலும் ஆப்ரிக்காவிலும்
உகாய்தான்  உறுதி !

UKAI
TOOTH BRUSH TREE
MESHWAK


ஒரு புறா அழகான உகாய் பழங்களை பாக்குது, சாப்பிடணும்னு தோணுது, பழத்தை சாப்பிட்ட புறா அதன் விதைகளையும்  சாப்பிடுது, அது மிளகு மாதிரி காரம் எடுக்கும்னு தெரியாது, காரம் தாங்க முடியல, உயரமான ஒரு கிளையில் போயி உக்காந்து பாக்குது, பிடறி மயிரை சிலுப்பிப் பாக்குது, கூவிப்பாக்குது, கத்திப்பாக்குது, கண்ணு ரெண்டும் செவசெவன்னு செவந்து போகுது, பொறி கலங்கிப் போகுது, ஆனா உகாய் காரம் மட்டும் போகல..

உகாயின் பழங்களைத் தின்ற ஒரு விவஸ்தை இல்லா புறாவின் அவஸ்தை இது, இதனை நற்றிணை என்னும் சங்க இலக்கியம் படம்பிடித்துள்ளது,  இதனைப் பாடலாக படம் பிடித்தவர் இனிசந்த நாகனார் என்னும் புலவர், ஆனால் இவரை உகாய்குடி கிழார் என்றும் அழைக்கிறார்கள். 

  ‘மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா வும் வெந்துகள்  இயவின் …’
(நற்றிணை 66 வது படல் –இனிசந்த நாகனார்)

000000000000000000000000000

பொதுப் பெயர்கள்: டூத் பிரஷ் டிரீ, மஸ்டர்ட் டிரீ, சால்ட் பிரஷ் டிரீ(TOOTHBRUSH TREE,  MUSTARD TREE,  SALT SALT BRUSH TREE )

தாவரவியல் பெயர்: சால்வடாரா பெர்சிகா (SALVADORA PERSICA)

பலமொழிப்பெயர்கள்:

1. அரபிக்: அரக் (ARAK)
2.அஸ்ஸாம்: அரக்  (ARAK )
3. பெங்காலி: ஃபார்சி மேஷ்வாக் (FARSI,  MESHWAK )
4. குஜராத்தி: கரிஜால் (KHARI JAL)
5. கன்னடா: கோனிமரா (GONI MARA)
6. மலையாளம்: உகாமரம் (UKA MARAM)
7.மராத்தி:  காகான் (KHAKAN) 
8. ஒடியா: தாரி (DHARI )
9.பஞ்சாபி:  சோட்ட வான் (CHHOTA VAN )
10. ரஜஸ்தான்: காரா ஜால் (KHARA JAL)
11. சமஸ்கிருதம்: டேனின் (DHANIN )
12.சிந்தி:  டியார் (DIAR)
13. தமிழ்: உகாய், பெருவிளா (UKAI, PERUVILA)
14. தெலுங்கு: குன்னாங்கி (GUNNANGI)
15.உருது:  பீலு (PILU)
16. இந்தி: ஜால் (JAAL)

நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் பல்துலக்க பயன்படுத்தியது உகாய் மரத்தின் வேர்க்குச்சிகளைத்தான். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள குச்சிகளின் எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என பலமுறை அண்ணல் நபி நாயகம் மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளார்.
 
இதுபற்றி குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதாக  சொல்லுகிறார்கள். உலகம் முழுக்க உள்ள இஸ்லாமிய மக்கள்  கடந்த 1000 ஆண்டுகளாக உகாய் மரத்தின் குச்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு உகாய் மரம் என்றால் தெரியாது, மெஷ்வாக் என்று சொல்ல வேண்டும்.

இந்த உகாய் மரத்தின் தாவரவியல் பெயர் சல்வடோரா பேர்சிகா. இதனை தமிழில் உகாய்மரம் என்றும் பெருவிளா என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கிலத்தில் இதன் பொதுபெயர் டூத் பிரஷ் ட்ரீ (TOOTH BRUSH TREE), இந்த மரத்தின் சொந்த ஊர் இந்தியா, சவூதி அரேபியா மற்றும் எகிப்து.
 
பரவியிருக்கும் இடங்கள்

இந்தியாவின் வட மேற்கு கடற்கரைப்பகுதி,  பாலஸ்தீனம், சிரியா, அரேபியா, ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன. 

தமிழ் நாட்டில் இந்த மரங்கள் இருக்கும் இடங்கள்
 
1. நொண்டிகருப்பன் கோவில், தாதனேந்தல்
2. மேலபுதுக்குடி, திருப்புல்லாணி அருகில்
3. சந்தவனியான் கோவில் வளாகம், ராமநாதபுரம்.
 
இந்த இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள மரங்கள் எல்லாம் 400 ஆண்டுகளுக்கும் மேலானது என்று சொல்லுகிறார்கள்.
 
இந்த மரங்களின் விதைகள் மற்றும் கன்றுகள் அஸ்ஸாமில் விற்பனை செய்யப்படுவதாக எனது நண்பர் ஒருத்தர் தகவல் சொன்னார். 

மரத்தின் பண்புகள்

தமிழ்நாட்டில் உகாய் மரங்கள் கிழக்கு கடலோர பகுதியில் ராமனாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக களர் உவர் நிலங்களில் ஒரு காலத்தில் அதிகம் இருந்ததாகச் சொல்லுகிறார்கள்.

பாலை நிலத்துக்குரிய மரம் என்கிறது சங்க இலக்கியம், இதன் அடிமரம் புறாக்களின் முதுகைப்போல சாம்பல் நிறமாக இருக்கும்,பூக்கள் பசுமையான மஞ்சள் நிறத்திலும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பூக்கும்.
 
பழங்கள் சிறிய சிவப்பு கோலிக் குண்டுகள் போல காய்க்கும், களர்த் தன்மையை தாங்கி வளரக்கூடியது.
  
 
உகாய் மரத்தின்  பயன்கள்:
 
ஆப்பிரிக்க மக்களும் பெரும்பகுதி இந்த மிஸ்வாக் மரத்தின் வேர்க்குச்சிகளைத்தான் பல்துலக்க பயன்படுத்துகிறார்கள் இது ஆர்கானிக் காலம்’. மெஷ்வாக் என்ற பெயரில் ஒரு உகாய் டூத்பேஸ்டும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது !

இதன் குச்சிகளை வேலமரக் குச்சிகளை போல பல்துலக்க பலநாடுகளில் பயன்படுத்கிறார்கள்.
 
அரேபியாவில் சகாயமான பல் விளக்கும் சாதனம் எது என்று கேட்டால் உகாய் குச்சிகள்தான் என்பார்கள்.
 
இதன் இலைகள், பட்டைகள், வேர்கள், கட்டைகள், பூக்கள், காய்கள், பழங்கள், விதைகள், அனைத்தும்  பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பழங்கள் நெல்மணிகளைப்போல மிகவும் சிறியதாக இருக்கும், இவற்றை பச்சையாகவும் உலர வைத்தும் சாப்பிடலாம், பழங்கள் சக்கரைபோல இனிப்பாக இருக்கும் விதைகள் மிளகு போல காரமாக இருக்கும்,
 
இந்த மரங்கள் அடுப்பெரிக்க மிகவும் அற்புதமான எரிபொருள், நமீபியாவில் இந்த  மரத்தின் இலைகள்தான் கால்நடைகள் விரும்பி சாப்பிடும் தீவனம்.

விதைகளிலிருந்து பிழிந்தெடுக்கும் எண்ணையை டிடெர்ஜெண்ட் எண்ணையாக பயன்படுத்துகிறார்கள்.
 
இதில் பல் சம்மந்தமான நோய்கள் உட்பட பலவிதமான வேறுநோய்களையும் சீராக குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் சிறப்பாக உள்ளன.
 
பெரும்பாலான மக்களுக்கு 60 வயதை தாண்டினால் போதும் அடுத்த நாளே மூட்டுவலி மூட்டுவீக்கம் வந்துவிடும், இதனை ருமாடாய்ட்ஸ், ஆர்த்தரைடீஸ் என்றெல்லாம் சொல்கிறார்கள்,வற்றை  குணப்படுத்தும் சக்தியும் இதில் உள்ளது.
 
விஷக்கடிக்கு எல்லாம் எந்த தனியார் டாக்டரிடமும் மருந்துகள் கிடையாது, சிகிச்சையும் இல்லை, விஷக்கடி என்றால் தாமதமில்லாமல் அரசு மருத்துவமனைக்கு தான் போகவேண்டும்.

அங்கு தான் அதற்கான  சிகிச்சையும் மருந்துகளும்  இருக்கிறது, தாமதமாகப் போனால் உயிரை இழப்பது கூட நேரிடும்.

இந்த காய் மரத்தின் இலைகள் மற்றும் இதர பகுதிகளை பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வருகிறார்கள்.
 
இலைகளிலிருந்து கஷாயம் தயார் செய்து பெரியவர்கள் 40 முதல் 50 மில்லி குடிக்க ஜலதோஷம் இருமல் ஆகியவை சரியாகும்.
 
இலைகளை நெருப்பில் வாட்டி இளஞ்சூட்டுடன், வீங்கி வலி எடுக்கும் கை கால் மூட்டுகளின் மேல் வைத்துக் கட்ட வலி வீக்கம் தானாகப் போகும்.

மரத்தின் வேர்களை வேர்பட்டைகளை மைபோல அரைத்து கூழாக்கி அதனை கடிவாயில் வைத்துக் கட்ட பாம்புக்கடி விஷம் இறங்குவதோடு கடிவாயின்  வலியும் குணமாகும்.
 
பழங்களில் தயாரித்த கஷாயத்தை பெரியவர்களுக்கு  50 மில்லி என்ற அளவில் தர எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
 
பழங்கள் மற்றும் வேர் கஷாயம் தர டிஸ்மெனோரியா (DYSMANORREA) எனும் வலியுடன்கூடிய மாதவிலக்கு, மற்றும் மிக்டூரிசன் (MICTURITION)என்னும்  சிரமப்பட்டு சிறுநீர் போதல் ஆகிய நோய்கள் சிரமமில்லாமல் குணமாகும்.

உகாயின்  கனிந்த பழங்களை சாப்பிட மலச்சிக்கல் சிக்கலில்லாமல்  போகும், இதன் விதைப்பொடி வயிற்று உபாதைகளை சரியாகும், இதனை மூக்குப்பொடி போல நாசியில் உறிஞ்ச ரினைடீஸ் (RHINITIS)மற்றும் சைனுசைட்டிஸ் (SINUSITIS) குணமாகும்.
 
இலைகளை மை போல் அரைத்து கூழாக்கி ஆசனவாயில் தடவ பைல்ஸ் என்னும் மூல நோய் குணமாகும், மூலத்திற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க லட்சக்கணக்கில் கறக்கிறார்கள்.
 
தோல் மீது ஏற்படும் நோய்களை குணப்படுத்த இலைச்சாந்து மற்றும் விதைச்சாந்தினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் குணமாகும்வரை தடவேண்டும்.
 
இந்த மரத்தின் இலைகள், பட்டைகள், கட்டைகள், சிம்புகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கும் சாற்றினை  பயன்படுத்தி பல கம்பெனிகள் பற்பசை தயாரித்து பணம் பார்க்கின்றன.
 
உகாயின் கனிகள் நெல்லைப்போல சிறிய அளவில், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும், ஈரம் பட்டவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும்,
இதன் இலைகளை கீரைகளைப்போல சாப்பிடலாம் ஆப்பிரிக்க மக்கள் இன்றும் இதனை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
 
இஸ்லாமிய நாடுகளில் பலவற்றிலும்காய் மரத்தின் குச்சிகளை பல்துலக்க பயன்படுத்துகிறார்கள், பள்ளிவாசலில் பலவற்றிலும் இந்த மரங்களை நட்டு வளர்க்கிறார்கள்.
 
குறிப்பு:  

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் நிறைந்திருந்த இந்த மரங்களை இதன் அருமை தெரியாமல் வெட்டி அழித்து விட்டார்கள்.
 
களர் உவர் நிலங்களில் வளரும் மரங்கள் இவை, அதனால் கடலோர நிலங்களில் எல்லாம் இந்த மரங்களை நட்டு வளர்க்கலாம், சிறந்த மூலிகை மரமாக இருப்பதால் இதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

பன்றிமுடியில் பல்துலக்கும் பிரஷ்

இப்போது நாம் பயன்படுத்தும் வடிவில் டூத்பிரஷ் வந்தது 1938 ல், ஆனால் பல்குச்சி பிறந்தது கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது நாம் பயன்படுத்தும் மாடலில் டூத்பிரஷ் முதலில் தயார் செய்தது சீனாதான். இந்த பிரஷ்களை பன்றி முடியில் தயரித்ததாகச் சொல்லுகிறார்கள்.


00000000000000000000000000

எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.easyayurveda.com / Meshwak Salavadora persica: Benefits, Remedies, Research, Side Effects.
www.flowersofindia.net / Salvadora persica
www.flickro.com /Pilu  Salvadoraceae
www.en.wikipedia.org/ Salvadora persica
www.tamilnet.com/ Ukaai Maram, 
www.thiruppullaniheritageclub.blogspot.com (Thanks for Image)
 
0000000000000000000000000
  



No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...