Sunday, July 5, 2020

கொரோனாவை நான் ஜெயித்தேன் - கணேஷ் - I DEFEATED THE CORONA VIRUS COVID 19 - GANESH





கொரோனாவை நான் ஜெயித்தேன்

- கணேஷ்

I DEFEATED THE CORONA VIRUS COVID 19 - GANESH

 

(தன்னை கொரோனா  வைரஸ் எவ்வாறு பாதித்தது என்பது பற்றியும், அதை எதிர்த்து எப்படி அவர் போராடி மீண்டார் என்பது பற்றியும் கணேஷ் என்பவர் எழுதியுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி அனைவறையும் சேரவெண்டும் என்பதனால் இதனை உங்களுக்குத் தருகிறேன், திரு கணேஷ் அவர்களின் பதிவில் எவ்வித மாற்றமும் செய்யாமல்)

(‘நம்மை எல்லாம் இந்த வைரஸ் தாக்காது, நாம் எடுக்காத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளா, நாம்தான் ஹெல்தி பாடி ஆச்சே  என்றெல்லாம் நீங்கள் நினைப்பவராக இருந்தால், அவரது பதிவை கட்டாயம் படிக்க வேண்டும். பரபரப்பும், திருப்பங்களும் நிறைந்த ஒரு சிறுகதையை படிப்பது போல் இருக்கும் அந்த பதிவு உங்களுக்காக இதோ)

இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து இருப்பேன், சானிடைசர் பயன்படுத்துவேன்.

முதல் நாள்,  08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது,  இரவு தூக்கம் சரியில்லை, ஆனாலும் என்னை நானே தேற்றிக் கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன்.

நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் உடலில் ஊடுருவத் தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதட்ட படுவதையும் என்னால் உணர முடிந்தது.

மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன்.  அப்போது காய்ச்சல் 99° டிகிரி இருந்தது.

இரண்டாவது நாள், 09.06.2020. லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது, உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் நிலை கண்டு என் மனைவி பதட்டம் அடைவதை பார்க்க முடிந்தது. 

எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது, நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன், அப்போதும் காய்ச்சல் 99° டிகிரி இருந்தது.

மூன்றாவது நாள், 10.06.2020 அன்று எனது  சுவாசம் வேகமாக இருந்தது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இருல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டேன் நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று தெரிந்தது, மிக நெருங்கிய நண்பர்களுக்கு எனது நிலையை விளக்கினேன், யாரும் என்னை பயமுறுத்தவில்லை மாறாக தைரியம் சொன்னார்கள். பயப்பட வேண்டாம் என்றார்கள், உணவு முறைகளை பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். மூன்றாவது நாளும் காய்ச்சல் 99° டிகிரி இருந்தது.

உணவு முறைபற்றி சொல்லுகிறேன் - 45 நிமிடத்திற்கு ஒருமுறை சூடான பானம் ஏதாவது ஒன்று குடிப்பேன் - வெந்நீர், டீ, இஞ்சி சாறு, ரசம், சூப், லெமன் டீ, சித்தரத்தை கசாயம் எதாவது ஒன்று, கபசுரக் குடிநீர் மட்டும் ஒருநாளைக்கு ரண்டு முறை மட்டும் குடிப்பேன்.

குளிர்ச்சியான உணவு இல்லாமல், வாய்க்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிடுவேன்.  தினமும் சைவம் என்றால் கொண்டை கடலை சுண்டல், அசைவம் என்றால் முட்டை, கோழி இறைச்சி தருவார்கள்


நான்காவது நாள், 11.06.2020:  அன்று தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல்கள் என்பது, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து வெந்நீர் குடிப்பது , உணவு எடுத்துக் கொள்வது. சிறுநீர் கழிக்க செல்வது ஆகியவை, அன்று சுரம்:99° இருந்தது.

ஆவி பிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றுநாம் பாரம்பரியமாக ஆவி பிடிக்கும் முறைகளை விட, 300 ரூபாய்க்கு விற்கும் எந்திரம் (Vaporizer) வசதியானது. அதைத்தான் நான் பயன்படுத்தினேன், ஆவி பிடிக்கும்  நீரில் ஒருபல் பூண்டு, அதே அளவு இஞ்சி, சிறிது மஞ்சள் தூள், ஒரு வெத்தலை ஆகியவற்றை போடவேண்டும். வரும் ஆவியை ஒரு புனல் வைத்து சிகரெட் பிடிப்பது போல் இழுக்க வேண்டும், இருமல் வரும், பயப்பட வேண்டாம்.

இது நுரையீரலில் தங்கியுள்ள கிருமிகளை கொன்று வெளியே கொண்டு வரும். ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை செய்தால் நலம்.

நான்காவது  நாளும் காய்ச்சல் 99° டிகிரி இருந்தது.


ஐந்தாவது நாள், 12.06.2020: உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. அய்ந்தாவது  நாளும் காய்ச்சல் தொடர்ந்தது.


ஆறாவது நாள், ஏழாவது நாள், எட்டாவது நாள், (13.06.2020 to 15.06.2020) ஆகிய மூன்று நாட்களும் படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். சாப்பிடுவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர் வெப்பம் இது எதையும் உணர முடியவில்லை. 


நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சி மீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 92 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்ல வேளை எனக்கு 95 முதல்  99 வரை மாறி மாறி ஆக்சிஜன் அளவு இருந்தது. ஆறு, ஏழு, எட்டு   ஆகிய மூன்று நாளும் காய்ச்சல் தொடர்ந்தது. அது 99.4 டிகிரியாக இருந்தது

 ஒன்பதாவது நாள் 14.06.2020 அன்று இரவு, ஒரு முறை தரையில் மயங்கி விழந்தேன், எவ்வளவு நேரம் என தெரியாது, ஆனால் நானே எழுந்து விட்டேன், அதன்பின் நல்ல மாற்றம் இருந்தது.

பதினோராவது நாள் 16.06.2020 அன்று  உடல்வலி குறையத் தொடங்கியது. ஆனால் உடல் பதட்டப் படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதை பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன், எனக்கு காய்ச்சல்:99.3° ஆக இருந்தது.

அதுவரை நான் மருத்துவமனை செல்லவில்லை, அதற்கு காரணம் என்னால் இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்று இருந்த நம்பிக்கை, மற்றொன்று மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார்.

வயிறு புண்ணானது போன்ற ஒரு உணர்வு தோன்றியதால் கபசுர குடிநீர் பருகுவதை நிறுத்திவிட்டேன்

பன்னிரண்டாவது நாள் 17.06.2020 அன்று காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. ஆம் நான் ஒரு கோரானா நோயாளி என்று அந்த அறிக்கை சொன்னது. 

இப்போது என் குடும்பம் மிகவும் பதட்டம் ஆகிவிட்டது.

என் மனைவி அரசாங்கம் வந்து என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை, என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப்பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது. என் மைத்துனன்தான் ஏற்பாடு செய்தார்.

என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார் "உங்கள் கணவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை."என்றார்.

 தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாட்களுக்கு தொடரச் சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தார். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார். 

அந்த மருத்துவர் என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். என் மனைவி அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டி செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். காய்ச்சலோ சுரமோ இல்லை.

பதின்மூன்றாவது நாள் 18.06.2020: உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை, தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்கிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எதிர் வரும் நாட்களை நான் ஓட்டவேண்டும். 

என்னை காப்பாற்றியதாக நான் கருதும் மூன்று விஷயங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

1. ஆக்சிஜன் அளவு குறையும் போது எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடித்தது. 

2. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று மூன்று நாட்களுக்கு ஆவி பிடித்தது.

3. ஐந்து நாட்கள் சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொண்டது, (5 நாட்கள்)

4. என்னை வெளியில் இருந்து கவனித்துக் கொண்ட என் மனைவி.
இவையே என்னை காத்தது என நான் உறுதியாக நம்புகிறேன். 

தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது. 

கிருமி நுரையீரலுக்குச் சென்றால் அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். வயிற்றுக்கு சென்றால் நீங்கள் அதை வென்று விட்டீர்கள் என்று பொருள். வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ள தேவையில்லை.

மூச்சு விட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.

கோரானா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. 

நாம் வாழப் பிறந்தவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் தோற்றுப் போகும் நபர்கள் அல்ல‌.*

என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனரின் நண்பர்கள், எனக்கு பிரச்சனை என தெரிந்தவுடன் என்னைத் தொடர்பு கொண்டு உதவி செய்த நமது சங்க பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தொகுப்பு: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

00000000000000000000000000000000


No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...