Monday, June 29, 2020

இடி மின்னலிலிருந்து தப்பிப்பது எப்படி - HOW TO ESCAPE FROM LIGHTENING & THUNDER






இடி  மின்னலிலிருந்து தப்பிப்பது எப்படி 

HOW TO ESCAPE FROM LIGHTENING & THUNDER

தமிழ் இலக்கியம் போல உலகில் எந்த இலக்கியமும் வாழ்க்கையை பிரதிபலிக்காது என்று சொல்லுவார்கள் அறிஞர் பெருமக்கள்,  இன்றைய நமது தலைப்புக்கு ஏற்றதொரு தமிழ் பாட்டு, சின்ன வயதில் படித்தது, அநேகமாய் உங்களுக்கும் தெரிந்திருக்கும், மழை அறிகுறிகள் பற்றி பாடும் கூட பள்ளி என்னும் தமிழ் இலக்கிய பாடல்

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்புசுற்றிக்
காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு  சொறித்தவளை
கூப்பிடுதே
சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்று அடைக்குதே -  மழை
தேடி ஒருகோடி வானம்
பாடியாடுதே
போற்று திருமால் அழகர்க்கு
ஏற்றமாம் ண்ணைச் சேரி
பள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே
(முக்கூடற்பள்ளு – 30)

ஒரு காலத்தில் தமிழ் மக்கள் மழைக்கு விழா எடுத்து அதனை இந்திர விழா என்று விமர்சையாக கொண்டாடினார்கள், இந்திரன் என்னும் தெய்வத்தை மழைக்கான கடவுளாக வணங்கினார்கள்.
 
00000000000000000000000000

இடிமின்னல் தாக்குதலால் சமீபத்தில் 83 பேர் பீஹார் மாநிலத்தில் இறந்திருக்கிறார்கள், இது ஒரே நாளில் பீகார் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் நடந்துள்ளது,து பல பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்துள்ளது.
 
இவர்கள் எல்லோருமே வயல்களில் அல்லது திறந்த வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், ஒன்று விவசாயிகளாக இருக்கும் அல்லது  தொழிலளிகளாக இருக்கும்.

பொதுவாக பருவமழைக் காலங்களில் இந்த இடி மின்னல் பலமாக இருக்கும், இந்தத் தகவலை எனக்கு டாக்டர் ஏ.வி. பாலசுப்பிரமணியன் என்ற ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார், அவர் சென்னையில் நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்க்கிறார்.
 
தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் இந்த சமயத்தில் இடி மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி முறைகளைச் சொல்லலாம், இது முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு உதவியாக இருக்கும்  என்று நினைத்தேன்.
 
அவரிடமே ஆலோசனை கேட்டேன் அவரும் ஒரு சிறிய வீடியோ படம் ஒன்றை அனுப்பியிருந்தார், அது சுருக்கமாக இருந்தாலும் பயனுள்ள பல தகவல்கள் இருந்தது

அதன்பின்னர் தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் எச்சரிக்கை செய்திகள் கிடைத்தது,வற்றை எல்லாம் தொகுத்து உங்களுக்காக இங்குந்துள்ளேன்.
 
1. இடியும் மின்னலும் ஏற்படும்போது திறந்த வெளிகளில் இருக்கக் கூடாது, நிற்பது, நடப்பது, வேறு எந்த வேலையும் செய்துகொண்டிருக்கக் கூடாது, காரணம் வெட்டவெளிகளில் எது உயரமான பொருளோ அதன்மீது தான் அதன் தாக்குதல் இருக்கும்.

2. இடி மின்னல் லேசான மழை என்று ஏற்படும்போதே உடனடியாக ஏதாச்சும் ஒரு கான்கிரீட் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சென்றுவிடவேண்டும், பஸ், கார் போன்ற வாகனங்களுக்குள் சென்று அமர்ந்து கொள்ளலாம். அதுதான் இடிமின்னல் தாக்காமல் இருக்க பாதுகாப்பு.

3. கண்டிப்பாக குடிசைகள், மரத்தடி, பேருந்து நிழற்குடை ஆகியவற்றில் ஒதுங்குதல் கூடாது, அவை பாதுகாப்பனவை அல்ல.
 
4. தண்ணீர் தேங்கி இருக்கும் நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும், குளம் குட்டை, போன்றவற்றிலிருந்து  விலகி இருத்தல்  பாதுகாப்பனது.

5.கொரோனா நிமித்தமாக டீவியில் பதினோராவது முறையாக ரிடெலிகாஸ்ட் பார்த்து அழுது கொண்டிருப்பார்கள், அவர்கள்  டீவியை ஆஃப் செய்யவேண்டும்.

6. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்க் மெஷின் என்று சிலர் கருமமே கண்ணாயிருப்பார்கள், அவர்கள்  அந்தந்த மெஷிங்களை ஆஃப் செய்யவேண்டும்

6. கர்ணன் காதில் குண்டலத்தோடு பிறந்தது மாதிரி எப்போதும் செல்போனும் காதுமாக திரிவார்கள், செல்போனை பிடுங்கிவைத்து அவர்களை காப்பாற்றுங்கள்.

7. ராத்திரி பகல் தெரியாமல் சிலர் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிகொண்டிருப்பார்கள், அவர்களிடம் கடிகாரம் அல்லது காலண்டரி காட்டி, அதனை ஆஃப் செய்யவேண்டும்.

8. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், செல்போன்,  கம்ப்யூட்டர், அகியவை தேவைப்படாதபோது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வையுங்கள்.

9. மின்வாரியத்தின்மீது இருக்கும் கோபத்தின் காரணமாக அதன் டிரான்ஸ்மிட்டர்கள், மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அறுகில் சிறுநீர் கழிக்காதீர்கள்.

10. இடிமின்னல் சமயம், அங்கேயே நின்று அடுத்தவர் பற்றி மணிக்கணக்காய்  புறணி பேசாதீர்கள்.

11. இடிமின்னல் சமயம் மின்சாரக்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனை கொண்டுபோய் பழைய இரும்புகடையில் போட்டால் எவ்வளவு கிடைக்கும் என்று யோசிக்காதீர்கள், அதன் அருகில் போகாமல் உடனடியாகஇபிஆபீசுக்கு தகவல் சொல்லுங்கள்.

12.மின்சார கம்பங்களைத் தொட்டு தங்கள் வீரத்தைக் காட்டுவது, அவற்றைப் பிடித்துகொண்டு தொங்குவது, விளையாடுவது, அதில் ஆடுமாடு, நாய்களைக் கட்டுவது, துணிகளைக் காயப்போடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.

13. சில கட்டிடங்கள் மிகவும் பழமையாக இருக்கும், அவற்றின் மின்சார ஒயர்கள் இத்துப்போயிருக்கும், அப்படிப்பட்ட சுவர்களில் ஆணிகளை அடிப்பது ஆபத்தானது. 

14. மழைக்காலத்தில் மின்சாரத்தால் தீவிபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு, அதனை  அணைக்க தண்ணீர் ஊற்றக் கூடாது, இதற்கு பதிலாக உலர்ந்த மண்னை பயன்படுத்தலாம்

15. இதற்கு உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைத்துவிட வேண்டும், கம்பளிப் போர்வையை பயன்படுத்தலாம், தீயணைப்புக்கு கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தும் தீயணைப்பான்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
 
தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு உங்கள் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இப்போது இந்த இடியும் மின்னலும் எப்படி உருவாகின்றன, இடியும் மின்னலும் ஒன்றா வெவ்வேறா ? கொஞ்சமாக சயின்ஸ் பார்க்கலாம்.
 
பூமியின் மேலே உள்ள காற்று வெப்பத்தினால் சூடாகிறது, அதன்பின் அது மேலே ஏறுகிறது, ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு போனபின்னர் அது குளிர்கிறது.
 
அது மழைத் திவலைகளை  உள்ளடக்கிய மழை மேகமாக மாறுகிறது, மழை மேகத்தின் மையப் பகுதிகளில் அயனிகள் கவர்தல் என்னும் செயலால் அங்கு மின்சாரம் உருவாகிறது, இதுதான் மின்னல்.
 
இந்த மழை மேகத்தின் மத்தியிலே உருவாகும் மின்சாரம்தான் ஒளியையும் வெப்பத்தையும் அதிக அளவு வெளியிடுகிறது,
 
இந்த மின்சாரம் உற்பத்தி  ஆகும் நேரம் கால்நொடி என்று கணக்கிட்டிருக்கிறார்கள், இந்த கால் நொடியில்தான்  இந்த இடியும் மின்னலும் இறங்குகின்றன.

இப்படி உருவாகும் மின்னல்களில் மூன்று வகைகள் உண்டு, ஒரே மேகத்திற்குள் ஏற்படுகின்ற மின்னலும் இடியும் ஒருவகை,  இரண்டாவது ஒரு மேகத்திற்கும் இன்னொரு மேகத்திற்கும் இடையே தோன்றுவது,  மூன்றாவது வகை வானத்து மேகத்திற்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல்.
 
இதுதான் மரங்கள் கட்டிடங்கள் மற்றும் உயரமான பொருட்கள் மற்றும் மனிதர்களின் மீது விழுந்து அழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துவது.
மின்னல் எந்த நிறத்தில் தோன்றும் ? பார்த்திருக்கிறீர்களா  ? மின்னல் வெள்ளை வெளேர் என்று இருக்கும், அதாவது வெள்ளை நிறத்தில் இருக்கும், அந்த வெள்ளையுடன் கொஞ்சம் நீம் சேர்த்த மாதிரி இருக்கும்.
 
சில சமயங்களில் அழகான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமாக கூட இருக்கும் மின்னல் வெட்டும்.
 
மின்னலும் இடியும்  ஏற்படும் போது போது வெப்பம் ஏற்படும், அப்படி ஏற்படும் வெப்பம் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா ? இது சூரியனின் மேற்பரப்பு வெப்பம் மாதிரி ஆறு மடங்கு இருக்குமாம்.

இந்த சமயத்தில் சூடான வெப்பக்காற்று சட்டென்று குளிரும்போது ஒரு அதிர்வாக வெளிப்படுகிறது,  அந்த அதிர்வின் ஒலிதான் இடி என்பது.
பெரும்பாலும் நாம் என்ன நினைத்து இருக்கிறோம் மின்னலும் இடியும் கெட்டது மட்டும் தான் செய்யும் என்று நினைக்கிறோம், பல நல்ல காரியங்களையும் செய்கின்றன.
 
இரண்டு நல்ல காரியங்களை பார்க்கலாம்.

உதாரணமாக நைட்ரஜனை நைட்ரேட் ஆக அம்மோனியாவாக மாற்றித் தரும் வேலையையும் அது செய்கிறது, அந்த  வடிவத்தில் இருக்கும்போதுதான் தாவரங்கள் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் வாயு வடிவில் இருக்கிறது என்பதனை நாம் அறிவோம், ஆனால் இதனை தாவரங்கள் அல்லது பிராணிகள் நேரிடையாக பயன்படுத்த முடியாது, வளி மண்டலம் என்றால் காற்று மண்டலம்.
 
தாவரங்களின் வேர் முடிச்சுக்களில்  பாக்டீரியாக்கள் இருப்பது நமக்குத் தெரியும், இந்த பேக்டீரியாக்கள் இந்த வேர்முடிச்சுகளின் தயவில் தங்கியிருக்கின்றன,  இந்த வேர் முடிச்சுகளுக்கு உதவ நினைக்கும் இந்த பக்டீரியாக்கள், காற்றுமண்டல நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தருகின்றன

நைட்ரேட்டுகள் மற்றும் அம்மோனியாவாக இருக்கும் நைட்ரஜன் சத்துக்களை தாவரங்கள் மற்றும் பயிர்கள் சுலபமாக பயன்படுத்த முடியும்.
அதே காரியத்தை மின்னல்களும் செய்கின்றன, ஓராண்டில் இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் பயன்படுத்தும் பாதிக்கும் மேற்பட்ட நைட்ரேட்டுகள் மற்றும் அம்மொனியாவை மின்னல்கள்தான் உற்பத்தி செய்து தருகின்.

அதுமட்டுமல்ல, ஓசோனை உற்பத்தி செய்யும் உருப்படியான காரியத்தையும் செய்கின்றன இடியும் மின்னலும், சூரியனின் புரா ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும் பணியினை  செய்கிறது ஓசோன் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
000000000000000000

இன்னொரு ஆச்சரியமான செய்தி, இடி மின்னல் நாடு என்று அழைக்கின்ற ஒரு நாடு இருக்கிறது, அதற்கு இடிமின்னல் தேசமென்றே பெயர், இந்தியாவின் தங்கை என்று சொல்லக்கூடிய பூட்டான் தேசம்தான் அது.
 
தண்டர் டிராகன் என்பதுதான் பூட்டான் நாட்டின் தேசிய சின்னமும் கூட, பூட்டான் நாட்டின் தேசியக்கொடியில் இந்த தண்டர் டிராகன் உள்ளது, இந்த தண்டர் டிராகன் பாம்புகள் கர்ஜிக்கும் ஓசைதான் இடிகள் இடிப்பது என பூட்டான் தேசத்து மக்கள் நம்புகிறார்கள்.

000000000000000000000000000
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370,
இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.tamilvu.org/ Palliyar Easal – Tamil Virtual University
www.365paa.wordpress.com / Mukkudarpallu
www.ta.m.wikipedia.org / Mukkudarpallu
www.quora.com / Why Bhutan called the Land of the Thunder Dragon
www.m.economic times.com/ Butan – The Land of Thuder Dragon – The Economic Times

0000000000000000000000000




A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...