Saturday, July 29, 2017

கல்யாண முருக்கு அம்சமான ஆட்டுத்தீவன மரம் - KALYANAMURUNGAI NUMBER ONE GOAT FODDER TREE



கல்யாண  முருக்கு  
அம்சமான 
ஆட்டுத்தீவன மரம் 

 KALYANAMURUNGAI
NUMBER ONE
GOAT FODDER TREE

                          தாவரவியல் பெயர்: எரித்ரீனா இண்டிகா (ERYTHRINA INDICA)
                                           தாவரக் குடும்பம்:   பேபேஸி  (FABACEAE )

மாப்பிள்ளை முருக்கு என்பதை நாம் கேள்விப்படிருக்கிறோம்; கல்யாண முருக்கு என்பது இதுதான் புதுப்பெயர்; காக்கா பூ மரம், சூடு கொட்டை மரம், தீவன மரம் எல்லாம் இதன் கூடுதலான  பெயர்கள்.

பலவகையான பயன்பாடுகளை இது தந்தாலும், பிரதானமாக இது ஒரு தீவன மரம் ;கிராமங்களில், கல்யாண முருக்கு மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக ஆடுகள் இருக்கும்;   ஆடுகள் இதன் தழைகளை அல்வா போல ரசித்து ருசித்து சாப்பிடும்.

எனது பள்ளிப்பருவத்தில், சூடுகொட்டை மரம் என்ற பெயரிலேயே  இதைத்  தெரியும்;  குறும்புக்கார சிறவர்கள் பாக்;கெட்டுக்களில், ஐந்தாறு கல்யாணமுருக்கு கொட்டைகள் இருக்கும்;  அதன் பெயர் சூடுகொட்டை;   சூடுகொட்டையை தரையில் தேய்த்து, நமது உடலில் எந்தப்பதியில் வைத்தாலும், நெருப்பில் சூடு வைத்த மாதிரி இருக்கும்;  இந்த சூடு கொட்டையினால் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்; சில சமயம் ஆசிரியர்கள்,  'செக்யூரிட்டி  செக்கப்' மாதிரி, பையன்களின் பாக்கெட்டுக்களை சோதனையிடுவர்; அதையும் மீறி மாணவர்கள் ரகசியமாக சூடு கொட்டையை எடுத்துச்செல்வர்.

இதன் பூக்கள் இரத்த சிகப்பு நிறத்தில், பெரிய  பூக்களாக, இலைகளே இல்லாமல், மரம் முழுவதும் பூக்களால் அலங்காரம்  செய்ததுபோல்  இருக்கும்;  இந்த  மரங்களின் மீது காகங்கள் அதிகம் அமர்ந்து, நீண்ட நேரம் விளையாடும்;  இந்தப் பூவில் காகங்கள், தேன் குடிப்பதாக சொல்வர்;  அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.

கல்யாண முருக்கு  மரங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன். மரத்தில் முள் இருப்பது, கரிய நிறத்தில் சிறு சிறு முட்கள் இருப்பது ஒருவகை;  முட்களே இல்லாதது ஒரு வகை; காப்பித் தோட்டத்தில் நிழலுக்காக வளர்ப்பது இது;  இன்னொரு வகையை மிளகுகொடியை ஏற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்; இந்த மரத்தை அழகு மரமாகவும்  பயன்படுத்துவர்;  இது 15  முதல் 17 மீட்டர் வரை உயரம் வளரும்.

இந்தியாவின் சில பகுதிகளில்  வெள்ளை நிற பூக்களையுடைய மரங்கள் உள்ளன.  இதன் நெற்றுக்கள் அதிக பட்சமாக அரை அடி அல்லது ஒரு அடி வரை இருக்கும்;  கறுப்பு நிறத்தில் இருக்கும்;  இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த ஒரு கவர்ச்சிகரமான நிறத்தில், இதன் விதைகள் இருக்கும்;  விதைகளைப் பார்ப்பதற்கு பெரிய உருவத்தில் பெரி ய, 'பெரும்பயறு' போல  இருக்கும்.

இதன் தழைகளில்  புரதம் 16.37 சதம், மாவுப் பொருட்கள்  37.12 சதம், மற்றும் கொழுப்பு  சத்து  5.38 சதமும்  அடங்கியுள்ளது;  ஆடுகள் மாடுகள் என்று அனைத்து விதமான கால்நடைகளுக்கும்  தீவனம் அளிக்கலாம்.

இம்மரம் வலுவில்லாதது; சரிவர எரியாது; ஆனால், தீக்குச்சிகள் செய்யலாம்;  பெட்டிகள் செய்யலாம்;  இதர தட்டு முட்டு சாமான்கள் செய்யலாம்;  காகிதக்குழம்பு  தயாரிக்கலாம்;   படகுகள், தோணிகள்,  கட்டுமரங்கள் செய்யலாம்.

இந்த மரங்கள் கிராமங்களில், வயல்களில் வேலியாகவும், குளம் மற்றும்  குட்டை, ஏரிக்கரைகளில், வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் .

நகரங்களில் அழகு மரமாக, வீடுகளின் முகப்பில், தோடத்தில், சாலை ஓரங்களில், பூங்காக்களில், பெரும் கட்டிட வளாகத்துக்குள்; இதனை  நட்டும்  வளர்க்கலாம்.

ஒரு கிலோ எடையில் சுமார், 2,000. விதைகள் இருக்கும்;  இதன் முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம்;   விதைகளை நீரில் ஒரு நாள் ஊற வைத்து விதைத்தால்,  நன்கு முளைக்கும்; 6 அடி நீளமுள்ள  போத்துக்களையும் வெட்டி நடலாம்.

தீவனத்திற்காக  நடும்போது, நெருக்கி நட்டு, அவ்வப்போது தழைகளை இறக்கி, கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

இதன் இலைகள் மூன்றிலைகளைக் கொண்டு  கொத்து கொத்தாக வளரும்; இந்த மூன்று இலைகளும் மும்மூர்த்திகளை  குறிப்பதாக சொல்வர்; வலப்பக்கம் உள்ள இலை சிவபெருமானையும், நடுப்பக்கம் உள்ள இலை பிரம்மாவையும், இடப் பக்கம் உள்ள இலை விஷ்ணுவையும் குறிக்கும்.

ஆடுமாடுகளுக்கென உருவாக்கும் மரத் தோப்புகளிலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அழகு தரும் மரமாகவும் வளர்க்கலாம.

பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370, மின்னஞசல்: gsbahavan@gmail.com



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...