Saturday, July 22, 2017

கல்லணை உலகின் பழமையான அணை - KALLANAI - WORDS' OLDEST DAM

                                       

கல்லணை 
உலகின் 
பழமையான 
அணை 

பூமி ஞானசூரியன், 
செல்பேசி; +918526195370

தமிழ்நாட்டில், உலகில், மிகப்பழமையான
 அணைகளுள்  ஒன்று   கல்லணை.
திருச்சிராப்பள்ளியிலிருந்து   15  கி.மீ.
தொலைவில்  காவேரி  ஆற்றின்மீது
கட்டப்பட்டுள்ள  அணை. இதனை கட்டியவன்
பேரரசன்  கரிகால் சோழன்.  தமிழகத்தில்
அணைகள் கட்டுமான   தொழில் நுட்பத்தை
பறைசாற்றிக் கொண்டிருக்கும் அணைக்கட்டு. 
 இன்று  அது 10 லட்சம்  ஏக்கர்  விவசாய
நிலங்களுக்;கு பாசனம் அளிக்கும்
சாதனையின்  அடையாளம்.

கல்லணை  காவிரி ஆற்றை
நான்கு ஆறுகளாக பிரித்து அனுப்புகிறது.
அவை  கொள்ளிடம்  ஆறு, காவிரி ஆறு,
வெள்ளாறு  மற்றும்  புது ஆறு.  அணையின்
நீளம்  329  மீட்டர் அகலம்  20 மீ    மற்றும்
உயரம்  5.4 மீ.  வயது 2000  ஆண்டுகள்.
சிறப்பு  இன்னும் இளமையாய்   இருப்பது. 

இரண்டாம் நூற்றாண்டில் கட்டியபோது
69,000  ஏக்கர்  பாசனம்  அளித்தது.  19 ஆம்
நூற்றாண்டில்,  1904 ஆம் ஆண்டில்,
கேப்டன்  கால்டுவெல்  (CAPTAIN CALDWELL)
என்ற வெள்ளைக்கார   ராணுவப்
பொறியாளர்  அணையின் உயரத்தை
0.69  மீ.  அதிகரிக்க திட்டம் வகுத்தார்.
கொள்ளளவைக் கூட்டினார்.
கிடைக்கும் பயன்களைப்  பெருக்கினார், 

அதன் பின்னர் கொள்ளிடம்
ஆற்றின்மீது கல்லணையின் நகலாக
ஒரு அணையைக்கட்டினார்  இன்னொரு
வெள்ளைக்காரர்.  அவருடைய பெயர் சர் .
ஆர்தர் காட்டன் (SIR ARTHUR COTTON)
அதுதான்   லோயர் அணைக்கட்டு.

திருச்சியில்  காவேரி  அகண்ட
காவேரியாக   ஓடுகிறது.  அது
முக்கொம்பு என்னுமிடத்தில்  உள்ள
மேலணையில்  காவேரி, கொள்ளிடம்
என  இரண்டாகப் பிரிகிறது. அதில்
காவேரி கல்லணையை  வந்தடைகிறது. 

காவிரி ஆற்றில்  மிகுதியான
நீரோட்டம் இருக்கும்  காலங்களில்
கொள்ளிடத்தில் நிரப்பி விடப்படுவதால்,
பல லட்சம் ஏக்கர்  நிலங்கள்  வெள்ள
அபாயத்திலிருந்து  தப்பிக்கின்றன.
 கொள்ளிடம்  பல லட்சம்  ஏக்கர்
விவசாய நிலங்களை  பாதுகாக்கவும்
செய்கிறது.

ஆண்டுதோறும்  காவிரியின்
வெள்ளத்தில்  சிக்கித்தவிக்கும்
மக்களுக்கு உதவவும்  கல்லணையை
கட்ட முடிவெடுத்தான்  அன்றைய
அரசன்  கரிகால்  சோழன். 

கல்லணையைக் கட்டுவதற்கு  அன்று ஒரு  புதிய முறையை  கையாண்டனர்.  ஆற்றின் குறுக்கே   பெரிய பாறைகளைக் கொண்டுவந்து   போட்டனர்.  அந்தப்பாறைகள் தண்ணீரில் அமிழ்ந்து  மண்பரப்பில் போய்  அமர்ந்தது. அதன்மீது  தண்ணீரில்  கரையாத  ஒட்டும் ஒருவகை களிமண்ணை  வைத்து   அதன்மீது   அந்தப்;  பாறையை  அடுக்கினர்.  இரண்டு செங்கற்களுக்கிடையே  சிமெண்ட் வைப்பது போல முழு அணையையும் கட்டி முடித்தனர்.
 
சர் டி ஆர்தர்  கார்ட்டன்  பல ஆண்டுகள்  கல்லணையை  ஆய்வுசெய்து பார்த்துவிட்டு  மிரண்டு போனார்.   பிறகு அதை அப்படியே   நகலெடுத்துதான் கொள்ளிடம்  ஆற்றின்மீது  கட்டினார், லோயர் அணைக்கட்டு.

இடைப்பட்ட காலத்தில் கல்லணையில்  மணல்மேடு உருவானதால்  அதன் நீரோட்டம்  குறைந்தது. இதனை சரிசெய்ய  வெள்ளைக்கார அரசால்  நியமிக்கப்பட்ட பொறியாளர்தான்  சர் ஆர்தர் கார்ட்டன். அவர்தான் மணல்போக்கிகளை அமைத்து மீண்டும் நீரோட்டத்திற்கு  வழிவகுத்தார்.  

அவர்தான்  கல்லணையின் கட்டுமானத்தை  ஆய்வு செய்தார்.   அதனைத்  தெரிந்து கொண்ட பிறகுதான்  அந்த தொழில் நுட்ப   உத்திகளை  உலகுக்கு   பறை சாற்றினார்.  அதனால்தான்  கல்லணைக்கு  தன்  பிரமிப்பு வெளிப்படும் விதமாக  கிராண்ட்  அணைக்கட்டு  (GRAND ANAICUT)  என்ற பெயரையும் சூட்டினார்.

அதிக வெள்ளம் வரும் காலங்களில்,  மிகுதியான நீரை தடுத்து நிறுத்துவதுதான்  கல்லணையின்  முக்கிய செயல்பாடு.  அதே சமயம் வெள்ளம் வந்தால்  அதைப் பாதுகாப்பாக கொள்ளிடத்தில்  திருப்பி  கடலில்  சேர்ப்பது  அதன் இரண்டாவது முக்கிய பணி. 

இந்த இரண்டு பணிகளையும் 2000   ஆண்டுகள்  எவ்விதமான குறையும் இல்லாமல்  செயல் படுத்தியது   கல்லணை. 

வெள்ளைக்கார  பொறியாளர்கள்  வண்டல் மண்மேட்டைக்  கரைப்பதில்  ஏறத்தாழ  25 ஆண்டுகள்  போராடினர்.   முயற்சிகள் அனைத்தும் ஒரு ஆணியையும் அசைக்கவில்லை.

கல்லணை  கோடு போட்டது போல  நேராக இல்லை.  இரண்டு மூன்று  நெளிவு  சுளிவுகளுடன்  காணப்பட்டது.  அணையின்  மேல் பரப்பும்  மட்டமாக இல்லை.  சாய்வாக இருந்தது. கிழக்கு முனையைவிட  மேற்கு  முனை,  தூக்கலாக இருந்தது.  

அந்த சாய்வும்  சரியாக இல்லை;  சில இடங்களில் மட்டம்  3 அல்வது  4  படிகளாக இருந்தது;  அதனை  முழுவதுமாக  வழுவழுப்பான  சுண்ணாம்புக் கலவையால் மெழுகப்  பட்டிருந்தது; கரடு முரடான முகப்பைக் கொண்டிருந்தது;  அணை  இடையறாமல்  வண்டல்மண்  குழம்பாகி  முன்பக்க சுவரின்  கவசமாக  இருந்தது. 
 
இந்த அமைப்பு திட்டமிட்டு    செயலபட்டதா  இடையில் நிகழ்ந்ததா  என்று வெள்ளைக்கார புலிகள்  தலையை பிய்த்துக்  கொண்டனர்.  அதன்  தொழில்நுட்பம்  புரியாத  புதிராக  அவர்களை மேலும்மேலும்  குழப்பியடித்தது. 

‘தமிழ் மக்களின்  கட்டுமான  தொழில்நுட்பத்  திறனுக்கு  நான்தான்  சாட்சி.  வாங்க வந்து  பாருங்க’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது  கல்லணை, கடந்த 2000   ஆண்டுகளாய்.

கரிகால்  சோழன்

உலகப்;பிரசித்தம் பெற்ற கல்லணையை  கட்டியவன் என்ற பெருமைக்கு  உரியவன்   கரிகால் சோழன்.  சங்க காலத்தில்  தென்னிந்தியாவை  அரசாண்ட சோழ மன்னன்.  இவனைப்பற்றிய அதிகாரப்பூர்மான தகவல்கள்  இதுவரை ஏதும்  கிடைக்கவில்லை.
 
ஆயினும்  பட்டினப்பாலை  ,பொருநராற்றுப்படை,  அகநானூறு,   புறுநானூறு,  ஆகிய சங்க இலக்கிய பாடல்களிலிருந்து  மட்டுமே சில தகவல்கள்  கிடைத்துள்ளன.

இளம்செட்சென்னி  மற்றும்  அல்லி,  கரிகால் சோழனின் பெற்றோர் .இளம் வயதில் தன் தந்தையை இழக்கிறான்.  இளம்வயது கரிகாலனால் அரியணை  ஏற முடியவில்லை.  நாட்டில் அரசியல் கலகம் ஏற்படுகிறது. விளைவு  சிறுவன்  கரிகாலன்  நாடு கடத்தப்படுகிறான்.  கரூரில் மறைந்து வாழ்கிறான்.  கலகம் அடங்குகிறது.  பழைய அரசின்  அமைச்சர்கள்  இவனுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறார்கள். அழைப்பை ஏற்று அங்கு செல்ல, காத்திருந்த எதிரிகள் அவனை சிறையிலடைக்கிறார்கள்.
 
ஒருநாள் இரவு சிறை பற்றிஎரிகிறது. இளம்வயது கரிகாலன் நெருப்பில்  எரிந்த காலுடன் தப்பிக்கிறான்.   பின்னர் அவன் மன்னன் ஆகிறான்.  எரிந்த கால் அவனை கரிகாலனாக்குகிறது.

இலங்கையை   முமுமையாக வெற்றி   கொண்ட   ஒருசில மன்னர்களில்  குறிப்பிடத்தக்கவன் கரிகாலன்.  சிங்களத்தை   வெற்றி கொண்டான்.  ஏராளமான சிங்களப்  படைவீரர்களை  கைது  செய்து தமிழகம் கொண்டு வந்தான். 

அப்படி கைதியாக வந்தவர்களைக்  கொண்டுதான்  கல்லணையைக்  கட்டி முடித்தான். கல்லணைக்கு தேவையான கற்களையெல்லாம்  மலைகளிலிருந்து சுமந்து வந்தவர்கள்,  கரிகானின் சிங்களக் கைதிகள்தான்.  கல்லணை கட்டியது தமிழ்மூளை.  கட்டியவை சிங்களக்  கைகள். 

கல்லணை   உலகப் பிரசித்தமான  அணைக்கட்டு  மட்டுமல்ல.  கரிகாலன் இலங்கையை  முமுமையாக போரிட்டு வெற்றி  பெற்றதன்  நினைவுச் சின்னம்.



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...